கிடாக் கறி.. இன்னிக்கு ஒரு பிடி.. கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு 106வது ஹேப்பி பர்த் டே.. ஊரே ஹேப்பி
கோவை: கோவை அருகே, மூதாட்டியின் 106 வது பிறந்தநாளை கிடா வெட்டி விருந்தளித்து, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பரபரப்பான இந்த கால சூழ்நிலையில், வீட்டில் முதியவர்கள் இருந்தால் ஒருசிலர், தங்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாக கருதுகின்றனர். வேறு சிலரோ, வயதான பெற்றோர்கள் வீட்டில் இருந்தால், தங்களுக்கு இடையூறாகவும், பாரமாகவும் இருப்பதாக நினைத்து, அவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு விட்டு விடுவதும் ஆங்காங்கே அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன.

வீட்டிற்கு முதியவர்கள் தேவை
ஆனால், வீட்டில் முதியோர்கள் இருந்தால் நல்லது என நினைப்பர்களும் இருக்கிறார்கள். மூத்தவர்களின் சொற்படி நடக்கும் குடும்பமும் இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசகராகவும், தனது அனுபவங்களை கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும் வீட்டில் உள்ள பெரியவர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களிடம் அன்பும், கருணையுமாக நடந்து கொள்ளும் குடும்பங்களும் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணமாக, கோவை அருகே 106-வயதான மூதாட்டியின் பிறந்த நாளை, அவரது குடும்பத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

கிருஷ்ணம்மாள் பாட்டி
கோவை தடாகம் சாலை கணுவாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் பாட்டி. கடந்த 1917ல் பிறந்த இவர், இன்று 106-வது வயதை அடியெடுத்து வைக்கிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் மூலம் பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள் என கிருஷ்ணம்மாள் பாட்டி குடும்பத்தில் தற்போது10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

பிறந்த நாள்
ஐந்து தலைமுறையைக் கண்டவரும், ஆயிரம் பிறைக்கும் மேல் கண்டவருமான கிருஷ்ணம்மாள் பாட்டியின்106-வது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக, கிருஷ்ணம்மாள் பாட்டியை புத்தாடை அணிய செய்து, தலைக்கு கிரீடம் வைத்து, சந்தனம் மாலை அணிவித்து அமர்க்களப் படுத்தினர். மேலும், பாட்டிக்கு பாத பூஜை செய்ததோடு, குடும்ப உறுப்பினர்கள் அவரிடம் ஆசீர்வாதமும் பெற்றனர்.

கிடா வெட்டி விருந்து
அதோடு விடாமல், பாட்டியின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்களை பிறந்த நாள் விழாவுக்கு அழைத்து வந்து, கிடா வெட்டி அனைவருக்கும் சிறப்பான முறையில் விருந்தளித்தனர். உணவு உண்ட உறவினர்களும் கிருஷ்ணம்மாள் பாட்டியின் பாதத்தில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.












Click it and Unblock the Notifications