மதபோதகர் ஜான் ஜெபராஜை தொடர்ந்து.. அவரது உறவினரும் கைது.. பாதிக்கப்பட்ட சிறுமிகள் பகீர் வாக்குமூலம்
கோவை: இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மூணாறில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜான் ஜெபராஜின் உறவினரையும் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் மதபோதகரான ஜான் ஜெபராஜ் (37). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் தங்கியுள்ளார். காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வந்தார். இவரது நடவடிக்கைக்கு சக மத போதகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் இருந்து வந்தன.

மதபோதனை நிகழ்ச்சிகளை இசைக் கச்சேரிகள் போல நடத்தி தானும் ஆடி, மக்களையும் ஆடவைத்து மதபோதனை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ஜான் ஜெபராஜ் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், ஜான் ஜெபராஜ் வீட்டில் கடந்த ஆண்டு மே மாதத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அப்போது, அதில் கலந்துகொண்ட 17 வயது சிறுமி மற்றும் அவருடைய தோழியான 14 வயது சிறுமிக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின்பேரில் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, தலைமறைவான மதபோதகர் ஜான் ஜெபராஜை கோவை, செங்கோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே ஜான் ஜெயராஜ் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்வதாகவும் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கலில் ஜான் ஜெபராஜுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கேரள மாநிலம், மூணாறு பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த ஜான் ஜெயராஜை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். கோவை காந்திபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு ஜான் ஜெபராஜ் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜான் ஜெபராஜின் உறவினரான கோவை மாவட்டம், துடியலூர் பகுதியை சேர்ந்த பெனட் ஹரீஸ் (32) என்பவரை கோவை மாநகர மத்திய அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications