ஆச்சரியம்+அச்சத்தில் உறைந்த கோவை! அதென்ன வெள்ளை கலர்ல? ரொம்பவே அரிதாம்.. நீங்களே பாருங்க
கோயம்புத்தூர்: பாம்புகள் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். ஆனால், கோவையில் இன்று வெள்ளை நிறத்தில் பாம்பு பிடிபட்டிருப்பது மக்களிடையே ஆச்சரியத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது. ஆனால், மனிதர்கள் அப்படித்தான் நினைக்கிறார்களா? தேவை எனில் எதையும் அழிக்க நாம் துணிந்துவிட்டோம். இதனால் சில உயிர்கள் உலகின் மிகவும் அரிய பொக்கிஷமாக மாறிப்போயின. இதில் பாம்பும் ஒன்று. வரலாற்று ரீதியாக பார்த்தால், பாம்புகள் நமக்கு சீனியர். நாம் உருவாவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே பாம்புகள் தோன்றிவிட்டன.

பாம்புகளில் பல வகைகள் இருந்தாலும், எல்லாமும் விஷம் கொண்டவை என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவில் உள்ள 400 வகையான பாம்புகளில், வெறும் 70 வகையானவை மட்டும்தான் விஷம் கொண்டவை. ஒரு காலத்தில் மொத்த உலகமே என்னுடைய ராஜ்ஜியம் என்று சுற்றிக்கொண்டிருந்த இந்த பாம்புகளை, நம்முடைய நகரமயமாக்கல் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு வருகிறோம்.
இப்படி இருக்கையில் இன்று ஒட்டு மொத்த கோவையே ஆச்சரியப்படும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதாவது, கோவை போத்தனூரில் குடியிருப்புவாசி ஒருவரது வீட்டின் நீர் தேக்கத் தொட்டியில் வெள்ளை நாகம் ஒன்று பதுங்கியிருந்திருக்கிறது.
இந்தியாவில் நாக பாம்புகள் பல வகைகளில் இருக்கின்றன. ராஜ நாகத்திற்க அடுத்தபடியாக அதிக விஷம் கொண்ட பாம்பாக, நாகங்கள் அறியப்படுகின்றன. ஒருமுறை கடிக்கும் போது வெளியேறும் இந்த பாம்பின் விஷத்தை கொண்டு 10 பேரை கொல்ல முடியும். அந்த அளவுக்கு நாகத்தின் விஷம் வீரியமாகவும், அடர்த்தியானதாகவும் இருக்கும். எனவே நாகத்தை கண்டால் எல்லோருமே அச்சப்படுவார்கள்.
பொதுவாக நாக பாம்பும், சாரை பாம்பும் ஏறத்தாழ ஒரே மாதிரித்தான் இருக்கும். ஆனால் நாகம், கோபப்படும்போது தலையை விரிக்கும். இதன் மூலம் பாம்புகளை பிரித்து அடையாளம் காண முடியும். நாகங்கள் பெரும்பாலும் கோதுமை நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் கருப்பு நிறங்களிலும் பார்க்க முடியும். ஆனால் வெள்ளை நிறத்தில் பார்ப்பது அரிது.
இந்தியாவின் தென்பகுதிகளில் வெள்ளை நிறத்தில் பாம்புகள் இதற்கு முன்னர் தென்பட்டிருக்கின்றன. ஆனால், குறைவான எண்ணிக்கையில்தான் பார்க்க முடிந்திருக்கிறது. இன்று இப்படியொரு வெள்ளை நாகத்தைதான், கோவையில் மக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து வனத்துறையினர் மீட்டிருக்கின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "நாகங்கள் அரிதாக வெள்ளை நிறத்தில் இருக்கும். மனித தோல்களுக்கு மெலனின் என்பது எப்படி நிறத்தை கொடுக்கிறதோ, அதேபோல பாம்புக்கும் நிறமியை கொடுக்கும் அம்சம் இருக்கிறது. ஆனால் சில பாம்புகளுக்கு இந்த அம்சம் குறைபாடாக இருக்கும். எனவே வழக்கமான கோதுமை நிறத்தில் இல்லாமல், வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் பாம்புகள் பிறக்கின்றன. ஆய்வாளர்கள் இதை பாா்சியல் அல்பினோ மரபணு குறைபாடு என்று கூறுகின்றனர்.
இதுதான் பாம்புகள் வெள்ளையாக இருக்க காரணம். இந்த பாம்பை பார்த்தால் அதிர்ஷ்டம் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மை என்னவெனில், வெள்ளை நிறம் காரணமாக, இப்பாம்புகள் சீக்கிரமாக அதான் எதிராளிகளால் வேட்டையாடப்பட்டுவிடுகிறது. எனவே, மற்ற பாம்புகளை விட குறைவான நாட்களே இவை உயிர்வாழ்கின்றன" என்று கூறுகின்றனர்.
என்ன மக்களே நீங்களும் இதுபோன்று வித்தியாசமான பாம்புகளை பார்த்ததுண்டா?












Click it and Unblock the Notifications