அரசு ஊழியர்கள் குறி.. வருமான வரி திரும்ப பெறுதல் திட்டத்தில் கோடிக்கணக்கில் மோசடி.. அதிகாரி வார்னிங்
கோவை: கோவை உள்பட 18 இடங்களில் வருமானவரி கணக்கெடுப்பு சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வருமானவரி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரும்ப பெறுதல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் போலியான விலக்குகளை எளிதாக்கி, மோசடியாக வரி திரும்பப் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது போலி ஆவணங்களை தாக்கல் செய்து வருமானவரி திரும்ப பெறுதல் திட்டத்தில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்று உள்ளது.
வருமான வரி கட்டுவதில் இருந்து தப்பிக்க விரும்பும் சிலர் வரி விலக்கு பெறுவதற்கு போலி ஆவணங்களை தாக்கல் செய்வதுஅதிகமாக நடப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பணம் அதிகம் புழங்கும் பகுதிகளில் வருமான வரி கணக்கில் மோசடி செய்வது, ஜிஎஸ்டி மோசடி செய்வது அவ்வப்போது நடக்கிறது.

வருமான வரி மோசடி
இந்த மோசடிகளை கண்டுபிடிப்பதற்காகவே கோவை உள்பட 18 இடங்களில் வருமானவரி கணக்கெடுப்பு சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாகவே வருமான வரி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் திரும்ப பெறுதல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் போலியான விலக்குகளை எளிதாக்கி, மோசடியாக வரி திரும்பப் பெறுவதாக கூறிய நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் எப்படி
இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வருமான வரி தாக்கல் செய்ய உதவும் நிபுணர்கள் மற்றும் இடைத்தரகர்கள் பல ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோருக்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக வருமான வரி திரும்பப் பெறுதலுக்கு உதவியது தெரியவந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக தற்போது கோவை உள்பட 18 இடங்களிலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய அதிகாரிகள், இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள்
டெல்லி, ஜார்கண்ட், தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர், அசாம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வரி செலுத்து வோருக்கு, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மற்றும் வாய்மொழி மூலம் இடைத்தரகர்கள் இந்த மோசடிக்கு வழிகாட்டுவதாக தகவல் வந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
கோடிகளில் மோசடி
தமிழ்நாட்டின் பல்வேறு நிலையங்களில் உள்ள இத்தகைய முகவர்களை பொறுத்தவரை, மோசடியான வருமான அறிக்கைகளை தாக்கல் செய்ய குறிப்பிட்ட மின்னஞ்சல் ஐ.டிகள் உருவாக்கியுள்ளார்களாம். இந்த மின்னஞ்சல் (இ-மெயில்) ஐ.டிகளில் இருந்து, ஏராளமான வருமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பல கோடி பணத்தை மோசடியாக திரும்பப் பெற்று உள்ளார்களாம்
வருமான வரித்துறை எச்சரிக்கை
ஆனால் கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் போது இத்தகைய மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய அரசை ஏமாற்றி வருமான வரி விலக்கு பெற தவறான வழிகளில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நடப்பு ஆண்டு அல்லது கடந்த ஆண்டுகளில் மோசடியான விலக்குகளை கூறி தவறான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்த அனைத்து வரி செலுத்துவோரும் தாமாக முன்வந்து புதுப்பிக்கப்பட்ட வருமான வரி, திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்தால் அபராதம் மற்றும் வழக்குகளில் இருந்துதப்பிக்கலாம். வருமான வரி அறிக்கையை புதுப்பிப்பதில் வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை உதவி வழங்கும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications