ஆளுநர் அரசியல் பேசவில்லை.. டக்கென டோனை மாற்றிய அண்ணாமலை.. அவரே கொடுத்த விளக்கத்தை பாருங்க
கோவை: தங்கள் தவறுகளை மறைப்பதற்காக ஆளுநரை வில்லனாக காட்ட திமுகவினர் முயற்சி செய்கிறார்கள் என்றும் ஆளுநர் அரசியல் பேசவில்லை, கருத்தை தான் தெரிவித்தார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராராஜன் செய்தியாளர்களை சந்திப்பது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "தமிழக ஆளுநர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் என்னை விட மகிழ்ச்சியான நபர் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.
திமுகவின் வண்டவாளம், தண்டவாளம் வெளியே வரும். ஆனால் பத்திரிகையாளர்களை சந்திக்கக்கூடாது என்பது எனது நிலைப்பாடு. காரணம் என்னவெனில் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக உள்ளேன். ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.. ஆளுநர் திமுகவை விமர்சித்துதான் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆளுநர் அவருடைய கடமையை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று பேசியிருந்தார்

குடியரசு தலைவருக்கு கடிதம்: அண்ணாமலையின் ஆளுநர் குறித்த இந்த கருத்து அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது. ஏனெனில் ,தமிழக ஆளுநரும் தமிழக அரசின் செயல்பாடுகளை பல்வேறு விவகாரங்களில் விமர்சித்து பேசியதால், அண்ணாமலை யாரை சுட்டிக்காட்டி இப்படி பேசுகிறார் என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்தன. இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை , தமிழக ஆளுநர் அரசியல் பேசவில்லை என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது:- தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதிக்கு ஆளுநர் குறித்து ஒரு கடிதம் எழுதினார். இதற்கு முதலில் முதல்வர் அவர்கள் கண்ணாடியில் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாத பிரச்சினைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என்று சொல்லக்கூடிய வகையில் தான் அந்த கடிதம் இருக்கிறது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு.
அவர்கள் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் எவ்வளவு இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப்பார்த்து அவர் தான் காரணம் என்கிறார்கள்.. அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என்கிறார்கள்.. அந்த கடிதத்தின் படி பார்த்தால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அதிமுக அமைச்சர் ஒருவரை நீக்க கோரி ஆளுநரிடம் வலியுறுத்தியது ஏன்?.. அதற்கான பதில் இல்லை..
ஆளுநர் மீது பழிபோடுகிறார்கள்: செந்தில் பாலாஜியை அதிக பாதுகாப்பு கொடுத்து உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. அந்த கடிதத்தில் செந்தில் பாலாஜியை உத்தரமராகவும்.. புத்தராகவும்.. ஒரு மானிடத்தை காக்க வந்த சேவகராகவும் பார்க்கிறார்கள்.. எதற்காக இத்தனை பொய்கள்.. தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக.. தன்னுடைய கட்சி செய்த குற்றங்களை மறைப்பதற்காக ஆளுநரை குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம். தங்கள் தவறுகளை மறைப்பதற்காக ஆளுநரை வில்லனாக காட்ட திமுகவினர் முயற்சி செய்கிறார்கள்.
கள்ளச்சாராய சாவுகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளிட்ட எவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது. எதற்காக ஆளுநர் மீது பழிபோடுகிறார்கள்.. ஆளுநரை மிகவும் தரக்குறைவாக.. அவரது மாண்புக்கு எந்த வித மரியாதையும் இல்லாமல்.. ஆளுநரை பற்றி ஒருமையில் பேசுகிறார்கள் என்றால் அது திமுகவினர் தான். தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவது இல்லை.
திருக்குறளை மொழி பெயர்த்ததில்: தோல்வியின் பயம் முதல்வருக்கு தெரிகிறது. முதல்வர் ஸ்டாலினின் தோல்வி பயத்தை காட்டக்கூடியதாவே தான் அந்த கடிதம் இருக்கிறது. 400 க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறார். அந்த இயலாமையைதான் கடிதத்தில் முதல்வர் வெளிப்படுத்தியிருக்கிறாரே தவிர வேறு எந்த விதமான உண்மையையும் கடிதத்தில் நான் பார்க்கவில்லை.
தமிழகத்தின் உண்மையான நிலைமையை பிரதிபலிப்பதாக அந்த கடிதம் இல்லை. ஜி யு போப் திருக்குறளை மொழி பெயர்த்ததில் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதைத்தான் ஆளுநர் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். ஜியு போப் டிரான்ஸ்லேட் பண்ணிய திருக்குறள் மீது சில கருத்துக்களை ஆளுநர் முன்வைத்து இருக்கிறார். அவருடைய கருத்து. சுதந்திரமாக ஆளுநர் அதை முன்வைத்து இருக்கிறார்.
ஆளுநர் அரசியல் பேசவில்லை: ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என நானே பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆளுநர் அரசியல் பேசவில்லை. அவருடைய கருத்து... திருக்குறளை பற்றி அவருடைய சொந்த கருத்து உள்ளது. ஜி யு போப் மொழிபெயர்த்ததில் அவருடைய சொந்த கருத்து உள்ளது. அதை எப்படி தவறு என்று சொல்வார்கள். ஆளுநர் வெறும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு.
ஆளுநர் துணை வேந்தர்களிடம் பேசுவார். நிகழ்ச்சிகளுக்கு பேசுவார். தமிழ்நாட்டை பற்றி பேசுவார். கலாசாரத்தை பற்றி பேசுவார். பேசுவதற்கு ஆளுநருக்கு உரிமை உள்ளது. அதையும் பேசக்கூடாது என்பது எந்த விதத்தில் சரி.. முதலவர் எழுதிய கடிதமே முன்னுக்கு பின் முரணாகதத்தான் இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications