இந்த ஏரியாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.. கனமழை கொட்டித் தீர்ப்பதால் கலெக்டர் உத்தரவு!
கோவை: கனமழை காரணமாக இன்று கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் மழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நிவாரண முகாம்களும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மாநில பேரிடர் மீட்பு படை துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் மிதவை படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் 100 போலீசார் வால்பாறையில் முகாமிட்டு உள்ளனர்.
கோவை வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருவதால், கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி அறிவித்துள்ளார்.
இதேபோல இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் முன்கூட்டியே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications