20 லட்சம் தரும் தமிழக அரசு.. கலைஞர் கடன் உதவி திட்டத்தில் கடன் பெறுவது எப்படி? கலெக்டர் விளக்கம்
கோவை: தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியான தாய்கோ வங்கி மூலம், சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் 7 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட இருப்பதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார். எனவே சிறு, குறு நிறுவனங்கள் கலைஞர் கடன் உதவி திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியான தாய்கோ வங்கி மூலம், சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் 7 சதவீத வட்டியில் ரூ.20 லட்சம் வரை அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 65-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள் தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் மற்றும் 2 ஆண்டுகளாக ஏற்கனவே லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக்கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கோவை காந்திபுரம் ராஜி நாயுடு லே-அவுட் வீதி, திருச்சி ரோடு ஒண்டிப்புதூர், பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள தாய்கோ வங்கியில் கடன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்" இவ்வாறு கோவை கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கோவையில் தொழில் தொடங்கி முன்னேற விரும்புவோருக்கு பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில் கடன் உதவியுடன் அரசு மானியம் வழங்குகிறது. இதுபற்றி கோவை மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் சண்முக சிவா கூறும் போது, கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 906 தொழில் நிறுவனங்கள் உதயம் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்க இந்த திட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். உற்பத்தி தொழில்களை ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழில்களை ரூ.5 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. கல்வி தகுதியும் தேவையில்லை.
மற்றொரு பிரிவில் உற்பத்தி தொழிலில் ரூ.50 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழிலில் ரூ.20 லட்சம் முதலீட்டிலும் தொழில் தொடங்க முடியும். இதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியம் ஆகும். பொது பிரிவினருக்கு 90 சதவீதம் அளவுக்கும், சிறப்பு பிரிவினருக்கு 95 சதவீதம் அளவுக்கும் வங்கி கடன் பெற்று தரப்படும்.
இதில் பொதுபிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 15 சதவீதம் அளவுக்கும், கிராமப்புறத்தில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் அளவுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. சிறப்பு பிரிவினர் நகர்ப்புறங்களில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம் அளவுக்கும், கிராமப்புறங்களில் தொழில் தொடங்கினால் 35 சதவீதம் அளவுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் ரூ.3 லட்சத்துக்கு ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். இதன்படி இந்த திட்டத்தில் கோவை மாவட்டத்தில் புதிதாக 161 பேர் என்ஜினீயரிங், தென்னை நார் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை தொடங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு ரூ.4.75 கோடி அளவுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications