அலறிய பயணிகள்.. கோவையில் மழைநீரில் மூழ்கிய பேருந்து.. ஓடி வந்த தீயணைப்பு படை.. மீட்கப்பட்டது எப்படி?
கோவை: கோவையில் சிவானந்தா காலனி பகுதியில் தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிய நிலையில், அந்தப் பேருந்தில் பயணித்த பயணிகள் தீயணைப்பு படையினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். கோவையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் கழிவு நீருடன் கலந்து மழைநீர் புகுந்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசைக்கு நகர்ந்து மத்திய அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தனித்தனி வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காணப்படுவதாகவும், இதனால் அரபிக்கடலில் நிகழும் காற்றழுத்தம் மேற்கே நகர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும், அது வட தமிழ்நாட்டின் கரையோரம் நிலவக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நாளை (அக்டோபர் 14) முதல் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி வரை மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கோவை மாநகரில், சிங்காநல்லூர், ராமநாதபுரம், சரவணம்பட்டி, கணபதி, காந்திபுரம், விமான நிலையம், விளாங்குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம், அவிநாசி சாலை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
கோவை மாநகர் பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், பல பகுதிகளில், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களைச் சந்தித்தனர். மழைநீர் உட்புகுந்து, வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நின்றன.
தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் அதிகளவில் குளம் போல தேங்கி இருந்தது. சங்கனூர் அருகே சிவானந்தா காலனி சாய்பாபா கோவில் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மழை நீரில் மூழ்கியது. காந்திபுரம் வழியாக உக்கடம் முதல் பிரஸ் காலனி வரை செல்லும் தனியார் பேருந்து பயணிகளுடன் வெள்ள நீரில் சிக்கிக்கொண்டது.
சாய்பாபா கோவில் செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், மழைநீர் தேங்கிய நிலையில் தனியார் பேருந்து மழை நீரில் மூழ்கியது. மழைநீருக்கு நடுவே பேருந்து நின்றுவிட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். கயிறு கட்டி அதை பிடித்தபடி பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஒவ்வொருவராக இறக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும், கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில், மாநகர பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்த நிலையில், சிதிலமடைந்த வீடுகளில் குடியிருக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறும், வெள்ள நீர் உட்புகுந்த வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்குமாறும் அவர்களுக்கு உணவு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருமாறும், வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேரிடர் கால அவசர உதவிகளுக்கு கோவை மாவட்ட மக்கள் 1077 அல்லது 0422-2301114 ஆகிய அவசர தொடர்பு எண்களை 24 மணி நேரமும் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications