சீட் கிடைக்காத ஆத்திரம்! அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு முற்றுகை! திமுக மகளிரணியினர் போர்க்கொடி!
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை எனக் கூறி திமுக மகளிரணியினர் கோவையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சிக்காக காலம் காலமாக உழைத்த தங்களுக்கு சீட் கொடுக்காமல் மாவட்டச் செயலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்குவதை தங்களால் ஏற்க இயலாது என அவர்கள் ஆவேசம் காட்டியுள்ளனர்.
தமிழகத்தின் பல இடங்களில் இதேபோன்று சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள பலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் வேட்பாளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் சுயேச்சையாக போட்டியிட்டும், முற்றுகை போராட்டம் நடத்தியும் தலைமையின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

திமுக மகளிரணி
அந்த வகையில் கோவை மாநகராட்சியில் சீட் எதிர்பார்த்து கிடைக்காத ஆத்திரத்தில் திமுக மகளிரணி நிர்வாகிகள் சிலர், அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். கோவை கொடிசியா பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லம் முன்பு திரண்ட திமுக மகளிரணியினர், கட்சிக்காக போராட்டத்தில் கலந்துகொண்டு பல வழக்குகளை சுமந்து வரும் தங்களை மாவட்டச் செயலாளர் ஏமாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.

போலீஸ் பேச்சு
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி இதில் தலையிட்டு பணம் பெற்றுக் கொண்டு சீட்டுக்கு பரிந்துரை செய்த மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் மென்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.

தேர்தல் நேரத்தில்
ஒவ்வொரு தேர்தலின் போதும் குறிப்பாக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நேரத்தில் இது போன்ற எதிர்ப்புகள் அனைத்துக் கட்சிகளிலும் எழுவது வழக்கமான ஒன்று என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதனிடையே கோவையில் அதிருப்தியில் உள்ள திமுக மகளிரணி உள்ளிட்ட நிர்வாகிகளை ஓரிரு நாட்களில் அழைத்துப் பேசி அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சனையை சுமூகமாக முடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications