அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! அன்று வேலுமணியுடன்! இன்று உதயநிதியுடன்! கோவையும் சர்ச்சையும்!
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் எனக் கூறப்படும் வின்னர்ஸ் இந்தியா கண்ணன் என்பவர் உதயநிதிக்கு வீரவாள் பரிசு கொடுத்த விவகாரம் தான் கோவை திமுகவில் விவாதப் பொருளாக மாறி வருகிறது.
பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்த போது ஓடி ஒளிந்த பலரும், இப்போது அதிகாரம் வந்தவுடன் அதனை பங்குபோட வருவதாக குமுறுகிறார்கள் கோவை உடன்பிறப்புகள்.
சென்னையில் காற்றுடன் பெய்த சாரல் மழை... சட்டென்று மாறிய வானிலை
கோவை மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவராக உள்ள திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாதிபதி, அந்த பேரவையின் கவுரக ஆலோசகராக வின்னர்ஸ் இந்தியா கண்ணனை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி வருகை
திமுகவில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்திக்கவும் கடந்த 26-ம் தேதி கோவைக்கு வருகை புரிந்தார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு பிறகு, அவருடன் புகைப்படம் எடுக்கவும் அவருக்கு நினைவுப் பரிசு கொடுக்கவும் பலரும் ஆர்வம் காட்டினர். அந்த வகையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வின்னர்ஸ் இந்தியா கண்ணன் என்பவரும் உதயநிதிக்கு வீரவாள் பரிசாக கொடுத்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
கோவை திமுக
இதனிடையே இந்த விவகாரம் தான் இப்போது கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் மத்தியில் புகைச்சலை உருவாக்கியிருக்கிறது. வேலுமணியின் நண்பராக அறியப்படுபவரை உதயநிதி ஸ்டாலின் இருக்கும் மேடையில் ஏற்றியது யார் என்ற விவாவதம் பரபரக்கிறது. கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவையின் கவுரக ஆலோசகராக உள்ள வின்னர்ஸ் இந்தியா கண்ணன் கடந்த காலங்களில் வேலுமணியுடன் ஒன்றாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
திமுக மேடை
இதுமட்டுமல்லாமல் வேலுமணியின் அண்ணன் எஸ்.பி.அன்பரசனுக்கு நெருக்கமானவர் எனவும் வின்னர்ஸ் இந்தியா கண்ணனை அடையாளம் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரை உதயநிதியிடம் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பது தான் கோவை திமுக நிர்வாகிகள் மத்தியில் எழும் கேள்வியாக உள்ளது. இதில் உதயநிதியை ஸ்டாலினை எள்ளளவும் யாரும் குறை சொல்ல முடியாது, பொதுவாழ்க்கையில் முக்கியப் பிரமுகராக உள்ள அவருடன் பலரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வருவதை அவர் தடுக்க முடியாது.
Recommended Video
நகைச்சுவை வசனம்
கோவையில் நடக்கும் நிகழ்வுகளை காணும் போது, சூரியன் திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி கூறிய ''அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா'' என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. கோவையில் திமுக கொடியை பறக்கவிட அக்கட்சியின் தலைமை தீவிரம் காட்டி வரும் வேளையில் உள்ளூர் நிர்வாகிகள் ஒரு சிலரது அஜாக்கிரதையான செயல்பாடுகளால் சர்ச்சைகள் ஓயாமல் தொடர்கின்றன.