கோவை -பெங்களூர் வந்தே பாரத் .. இவ்வளவு மெதுவான ரயிலா? ஆரம்பிக்கும் முன்பே எழுந்த விமர்சனங்கள்
கோவை: கோவை பெங்களூர் வந்தே பாரத் 380 கிமீ தூரத்தை கடக்க 5.40 நிமிடம் என்பது மிக அதிகம் என்றும் சராசரியாக 70 கிமீ வேகதத்தில் தான் வந்தே பாரத் போகிறதா? என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். ஏற்கனவே ஓடும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலே காற்று வாங்கும் போது, இவ்வளவு மெதுவாக செல்லும் இந்த ரயில் எப்படி வெற்றி பெறும் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை- கோவை, சென்னை- நெல்லை, சென்னை-மைசூரு (பெங்களூர் வழியாக)) இடையே வந்தே பாரத் ரயில்கள் ஓடுகின்றன. இதில் சென்னை- கோவை, சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு புதிதாக ஒரு வந்தே பாரத் ரயில் நாளை மறுநாள் (டிச 30)) பிரதமர் நரேந்திர மோடியால் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. கோவை பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைக்க உள்ளார். புதிய வந்தே பாரத் ரயிலுக்கு பாஜக, திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளுமே வரவேற்பு தெரிவிக்கிறார்கள். அதேநேரம் இந்த ரயிலின் வேகம் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பெங்களூர் வந்தே பாரத் நேரம்:எட்டு பெட்டிகளுடன் கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்படடு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக காலை 11:30 மணி அளவில் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும். அதன் பின்னர் பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணி அளவில் கோவை திரும்பும்.
கோவை - பெங்களூரு இடையிலான 380 கிலோமீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயிலில் சாதாரண சேர் கார் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 1000மாவும், எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட் குறைந்தபட்சம் 1850 ஆகவும் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ரூட்டில் ஏற்கனவே செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் குறைந்தபட்ச நேரமாக கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்ல 6 மணி நேரம் 45 நிமிடம் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் புதிய வந்தே பாரத் ரயிலில் சென்றால் சுமார் 1 மணி நேரம் 5 நிமிடம் மிச்சமாகும். அதாவது 5.40 நிமிடத்தில் போய்விட முடியும். தற்போது தனியார் பஸ்களில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வரை குறைந்தபட்சம் 7 மணி நேரம் ஆகிறது. இந்த வந்தே பாரத் ரயில் தான் மிகக் குறைவான நேரத்தில் பெங்களூர் போக முடியும் என்பதால் வரவேற்பு உள்ளது. மேலும் சேலத்தில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் செல்வதால் ரயிலுக்கு வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயிலின் வேகமும், கால நேரமும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை பெங்களூர் வந்தே பாரத் 380 கிமீ தூரத்தை கடக்க 5.40 நிமிடம் என்பது மிக அதிகம் என்றும் சராசரியாக 70 கிமீ வேகதத்தில் தான் வந்தே பாரத் போகிறதா? என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயில் 110 கிமீ (அதுதான் ரயிலின் வேகம்) வேகத்தில் சென்றால் அதிகபட்சம் 4 மணி நேரத்தில் போய்விட முடியும். வெறும் 4 மணி நேரத்தில் செல்ல வேண்டிய ரயில் 5.45 நிமிடம் போகிறது என்றால் அதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதேபோல் ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தினமும் செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கே போதிய வரவேற்பு இல்லை. அந்த ரயிலில் கட்டணம் வெறும் 180 மற்றும் ஏசி கட்டணம் 620 ஆக உள்ளது. அதற்கே வரவேற்பு இல்லை.. அந்த ரயில் பெரும்பாலான நாட்கள் காற்று வாங்குகிறது. இந்நிலையில் வெறும் ஒரு மணி நேரம் முன்பாக செல்லும் வந்தே பாரத் ரயிலில் செல்வதை எப்படி விரும்புவார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் வந்தே பாரத் ரயில் பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலையத்திற்கு செல்லும் வகையிலும் அறிவிக்கப்படவில்லை. இதையும் விமர்சனம் செய்கிறார்கள். கோவை பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு இருக்குமா.. இருக்காதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications