கோவை அதிமுகவில் ஒரு வி.ஐ.பி. அவுட்... ஒரு வி.ஐ.பி. இன்... அனல் பறக்கும் அரசியல் ஆட்டம்..!
கோவை: கோவை மாவட்ட அதிமுகவிலிருந்து ஒரு விஐபி திமுகவுக்கு சென்ற நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஒரு விஐபியை அழைத்து வந்துள்ளார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
இதன் மூலம் கோவை அதிமுகவில் வெற்றிடம் என்பதே கிடையாது என தனது சக கட்சியினருக்கு அவர் உணர்த்தியுள்ளார்.
கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் அதிமுகவிலிருந்து விலகியதற்கான காரணமும் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்த பின்னணியும் சற்று சுவாரஸ்யமானது.

எளிய நிலை
கோவையை பூர்வீகமாக கொண்ட கணபதி ராஜ்குமார் பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். மூன்று முறை கவுன்சிலராக மட்டும் இருந்த இவரை ஜெயலலிதாவே நேரடியாக தேர்வு செய்து கோவை மேயராக்கினார். செ.ம.வேலுச்சாமி மீதான கோபத்தில் கணபதி ராஜ்குமாருக்கு வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. இவரும் தனது பதவிக்காலத்தை எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் நிறைவேற்றினார்.

கருத்து வேறுபாடு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர் வேலுமணியுடன் கணபதி ராஜ்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சியில் முக்கியப் பொறுப்பு, டெண்டர் உள்ளிட்ட மேலும் சில விவகாரங்களை எதிர்பார்த்த கணபதி ராஜ்குமாருக்கு அவர் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால்அமைச்சர் வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக திமுகவில் இணைய முடிவெடுத்த அவர், சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும் தனது நண்பருமான கார்த்திக் மூலம் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

வெற்றிடம்
கோவை மாவட்ட அதிமுகவிலிருந்து ஒரு வி.ஐ.பி. வெளியேறிவிட்டாரே என நினைத்திருந்த கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அமைச்சர் வேலுமணி. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநிலச் செயலாளராக இருந்த பேராசிரியர் கல்யாணசுந்தரத்தை அதிமுகவில் இணையுமாறு அழைப்புவிடுத்து அதனை நிறைவேற்றியும் காட்டினார். கல்யாணசுந்தரம் விஷயம் தெரிந்தவர், விவரமானவர் என்பதால் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவுக்கு பக்கபலமாக இருப்பார் எனக் கருதி அவரை அதிமுகவுக்கு அழைத்து வந்துள்ளார் எஸ்.பி.வி.

ஆலோசனை
முதலில் அதிமுகவில் இணைய பேராசிரியர் கல்யாணசுந்தரம் சற்று தயக்கம் காட்டியிருக்கிறார். தனித்து அமைப்பு தொடங்கும் சிந்தனையில் இருந்த அவரிடம் அதன் நடைமுறைச் சிக்கல் குறித்து நண்பர்கள் எடுத்துரைத்துள்ளனர். மேலும், நிதி விவகாரமும் முக்கியம் என்பதால் தனி அமைப்பு என்ற சிந்தனையை கைவிட்டு நீண்ட நெடிய யோசனை, ஆலோசனைக்கு பிறகு அதிமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார் கல்யாணசுந்தரம்.












Click it and Unblock the Notifications