கள்ளக்காதலன் கஷ்டத்தில் இருந்ததால் கொள்ளை சம்பவத்துக்கு உதவியதாக முத்தூட் நிறுவன பெண் வாக்குமூலம்
கோவை: கள்ளக்காதலன் கஷ்டத்தில் இருந்ததால் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளை சம்பவத்துக்கு உதவியதாக அந்த நிறுவன பெண் ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை ராமநாதபுரம் முத்தூட் மினி என்ற நகை அடகு நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் அடகு வைத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் போத்தனூரை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரது மனைவி ரேணுகா தேவி(26), கெம்பட்டி காலனியை சேர்ந்த திவ்யா(24) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே பணியாற்றிக் கொண்டிருந்த திவ்யா திடீரென விடுமுறை எடுத்துவிட்டார்.
முத்தூட் நிறுவனத்தில் 814 பவுன் கொள்ளை.. பெண் ஊழியர்களே நடத்திய கபட நாடகம்.. கள்ளக்காதலன் கைது
கடும் தாக்குதல்
இதனால் அவருக்கு பதிலாக செல்வபுரம் கிளையில் உள்ள மற்றொரு திவ்யா என்பவர் கடந்த சனிக்கிழமை பணியாற்றினார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ரேணுகாவையும் திவ்யாவையும் கடுமையாக தாக்கியதில் இருவரும் மயக்கம் போட்டு விட்டனர்.
விசாரணை
அப்போது அங்கிருந்த பெரிய லாக்கரில் இருந்து 814 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வந்தனர். இந்த கிளையில் இவ்வளவு நகைகள் இருப்பது குறித்து புதிதாக ஒரு நாள் விடுப்பில் வந்த திவ்யாவுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே ரேணுகாதேவிக்கு இதுதொடர்பாக தெரியவந்திருக்கும் என்பதால் போலீஸார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
சுரேஷ்
மேலும் ரேணுகாதேவிக்கு கொள்ளை நடப்பதற்கு முன்னர் ஒரே எண்ணில் இருந்து ஏராளமான போன் கால்கள் வந்ததால் போலீஸாருக்கு சந்தேகத்தை வலுவாக்கியது. இதையடுத்து கெம்பட்டி காலனியை சேர்ந்த சுரேஷ் (32) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்காதல்
இதுகுறித்து ரேணுகா தேவி மற்றும் சுரேஷிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கூறுகையில் ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷுக்கு திருமணமாகிவிட்டது. இவர் கோவை கெம்பட்டி காலனியில் தங்கி பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் நகை கடையில் பணியாற்றியுள்ளார். முத்தூட் நிறுவனத்துக்கு நகை அடகு வைக்க சென்ற போது ரேணுகாதேவிக்கு சுரேஷுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.
கஷ்டத்தில் கள்ளக்காதல்
இதனால் சுரேஷ் பொருளாதார ரீதியாக நெருக்கடியில் இருப்பதாக கூறியதால் நகை கொள்ளை அடிக்க ரேணுகாதேவி உதவியுள்ளார். இதற்காக அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மாலை 3 மணி அளவில் முகத்தை மறைத்துக் கொண்டு நிதி நிறுவனத்துக்கு சென்ற சுரேஷ் நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்தது தெரியவந்தது. இருவரிடமும் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.