ஆஹா மொத்தமாக மாற போகும் கோவை.. நீண்ட நாள் கோரிக்கை ஒரு வழியா நிறைவேற போகுது! சூப்பர் தகவல்
கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அதன் பணிகள் தொடர்ந்து தாமதமடைந்து வந்தது. இதற்கிடையே ஏர்போர்ட் விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் கட்டுமானம் தொடங்கப்படும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது.
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பைக் கோவை தொழிலதிபர்கள் வரவேற்கும் அதேநேரம் கோவை ஏர்போர்ட் விரிவாக்க பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏர்போர்ட்: இது தொடர்பாகக் கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பினர் கூறுகையில், "ஓசூரில் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் பெரியளவில் பயன்பெறும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. சமீப காலங்களாக ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது. அங்கு புதிய தொழிற்சாலைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓசூர் ஏர்போர்ட் தமிழகத்திற்கு முக்கியம் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேநேரம் ஓசூரில் அமையும் ஏர்போர்ட் கோவை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து பயணிகளை ஈர்க்காது. திருச்சி டூ கோவை வெறும் 200 கிமீ தொலைவு தான்.. எப்படி கோவை மக்கள் சர்தேச விமானங்களைப் பிடிக்கத் திருச்சி செல்ல மாட்டார்களோ.. அதேபோல இங்கிருந்து ஏர்போர்ட் பயன்படுத்த ஓசூருக்கு செல்ல மாட்டார்கள். எனவே, இதை காரணமாகச் சொல்லி கோவை ஏர்போர்ட் விரிவாக்கத்தைத் தாமதப்படுத்தக் கூடாது" என்றார்.
டிஆர்பி ராஜா: இதற்கிடையே தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது கோவை ஏர்போர்ட்டை பொறுத்தவரை நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடையாமல் இருந்ததே விரிவாக்க பணிகள் தொடங்க தாமதமாகக் காரணமாக இருந்தது. இதற்கிடையே இப்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டிஆர்பி ராஜா, விரிவாக்க பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ள நிலையில், ஓசூர் விமான நிலையம் வருவதற்குள், கோவை ஏர்போர்ட் விரிவாக்க பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஏன் தேவை: இது தொடர்பாகக் கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில் சங்கத்தினர் கூறுகையில், "இந்த மண்டலத்திற்கான இரண்டாவது விமான நிலையத்திற்கான திட்டத்தையும் கோவை சமர்ப்பித்துள்ளது. தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு விரிவாக்க பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும்.
ஓசூர் மற்றும் பெங்களூர் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தாலும் அவை கிட்டத்தட்ட இரட்டை நகரங்கள் போலத் தான்.. ஓசூரின் தொழில் வளர்ச்சி ஒரு சுவாரஸ்யமான ஒன்று. எனவே, ஓசூருக்கு ஏர்போர்ட் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் கோவையில் விமான நிலையத்தை மேம்படுத்துவது மாநில அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இங்கு விமான நிலையத்தை விரிவுபடுத்துவதில் ஏற்படும் தாமதம் இப்பகுதியின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்" என்கிறார்கள்.
வேகம் வேண்டும்: கோவை ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் இது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. ஏர்போர்ட் விரிவாக்க பணிகள் தொடர்ந்து தாமதமாவதால் நகருக்கு வரும் பல முக்கிய பிஸ்னஸ் வாய்ப்புகள் மிஸ் ஆவதாக அப்பகுதி தொழிலதிபர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதனால் விரிவாக்க பணிகளை இனியும் தாமதப்படுத்தக்கூடாது என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications