ஆண்களை மயக்கி.. லட்சக்கணக்கில் பணம் பறிப்பு.. ஸ்கெட்ச்சில் சிக்கிய "சில்வண்டு" - ஆமா.. அது என்ன ஆப்?
"தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான செயலிகள் நிறைய இருக்கின்றன. இதில் பல ஆண்கள் சென்று சமூக விரோதிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்"
கோவை: கலியுகத்தில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணமாக, இப்போது நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும் போதும் கேள்விப்படும் போதும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் ஆண்கள் பணம் பறிப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தற்போது ஆண்களே ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அப்படியொரு பகீர் சம்பவம்தான் கோவையில் நடந்திருக்கிறது. தன்பாலின ஈர்ப்பாளர்களை பேசி மயக்கி, அவர்களை தனியே வரவழைத்து லட்சக்கணக்கில் பணம், நகைகளை சுருட்டியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.

புகார் கொடுக்க தயங்கிய ஆண்கள்
கோவை மாவட்ட போலீஸாருக்கு சமீபகாலமாக அவ்வப்போது ஆண்கள் சிலரிடம் வழிப்பறி புகார்கள் வந்து கொண்டிருந்தன. தன்னிடம் இருந்து இவ்வளவு பணத்தை ஒரு இளைஞர் வழிப்பறி செய்துவிட்டார் என அந்த ஆண்கள் தொலைபேசியில் தெரிவிப்பார்கள். சரி, நேரில் வந்து புகார் தாருங்கள் எனக் கூறினால் அவர்கள் யாரும் வருவதில்லை. இது, போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொலைப்பேசியில் பேசுபவர்கள் எதற்கோ பயந்து நேரில் வந்து புகார் அளிக்க மறுக்கிறார்கள் என்பதை போலீஸார் தெரிந்து கொண்டனர். இவ்வாறு தொலைப்பேசியில் பேசிய பெரும்பாலானோர் கூறும் கருமத்தம்பட்டியில்தான் வழிப்பறி சம்பவம் நடந்ததாக கூறி வந்தனர்.

சிக்கிய இளைஞர்
இதையடுத்து, கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக போலீஸார் மஃப்டியில் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் தெக்கலூர் பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து, போலீஸார் அவரை பிடித்து விசாரித்தனர். போலீஸார் தன்னை பிடித்ததும், அந்த இளைஞர் பயத்தில் "சார், நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். இனி இப்படி செய்ய மாட்டேன்" எனக் கூற, அவரை அப்படியே காவல் நிலையத்துக்கு போலீஸார் தூக்கிச் சென்றனர்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் APP
அங்கு அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் செய்த சேட்டைகளை போலீஸிடம் அவர் கூறியுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த அவரது பெயர் கிஷோர் குமாராம். 25 வயதான அவர், பட்டப்படிப்பு முடித்துவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்திருக்கிறார். மற்ற சமயங்களில், செல்போனில் நேரத்தை செலவழித்துள்ளார். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்புதான் தன்பாலின சேர்க்கையில் ஆர்வம் கொண்ட ஆண்களுக்காக (Gay) பல செயலிகள் (App) இருப்பது தெரியவந்தது. பின்னர், அதற்குள் சென்று பார்த்த போது ஆண்களும் ஆண்களும் காதல் ரசம் சொட்ட பேசிக்கொள்வதும், தனியே சந்தித்து உல்லாசம் அனுபவிப்பதும் தெரியவந்தது.

நகை, பணம் பறிப்பு
இதை பார்த்த கிஷோர் குமார், இதுபோன்ற நபர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். அதன்படி, அந்த ஆப்-க்குள் சென்று ஒவ்வொரு ஆண்களாக தேர்ந்தெடுத்து அவர்களிடம் நைஸாக பேசி காதல் வலையில் விழ வைத்துள்ளார். பின்னர் அவர்களிடம் நாம் தனிமையில் சந்திக்கலாம் என ஆசைவார்த்தை கூறி கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள சில இடங்களுக்கு வர வைப்பாராம். அப்படி வந்த ஆண்களை அடித்து உதைக்கும் கிஷோர் குமார், அவர்களிடம் உள்ள பணம், விலை உயர்ந்த செல்போன்கள், நகைகளை பறித்து வந்துள்ளார். இவ்வாறு லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புக் கொண்ட பொருட்களை அவர் பறித்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார், இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் எச்சரிக்கை
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், "தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான செயலிகள் நிறைய இருக்கின்றன. இதில் பல ஆண்கள் சென்று சமூக விரோதிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். பின்னர் நகை, பணத்தை இழந்துவிடுகிறார்கள். ஆனால், போலீஸாரிடம் சென்றால் தங்கள் குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்துவிடுமோ என பயந்து யாரும் புகார் கொடுப்பதில்லை. முதலில், இதுபோன்ற ஆப்-களுக்குள் யாரும் செல்ல வேண்டாம். அப்படியே சென்று பணம், நகை பறிக்கப்பட்டால் போலீஸாருக்கு புகார் கொடுங்கள். அப்பொழுதான், இதுபோன்ற நபர்களை கைது செய்ய முடியும்" என்றனர்.












Click it and Unblock the Notifications