அடுத்த சர்ச்சை.. சிங்கம் தாக்கி உயிரிழந்தால் அரசு நிவாரணம் தருகிறது.. திண்டுக்கல் சீனிவாசன்
சிங்கம் தாக்கினால் அரசு நிவாரணம் வழங்குகிறது என அமைச்சர் பேச்சு.
Recommended Video

கோவை: சிங்கம் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்குகிறது என்று கூறி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திரும்பவும் சர்ச்சை வார்த்தைகளை வாரி இறைத்துள்ளார்.
தமிழ்நாடு வனத்துறை சார்பாக 24 வது மாநில வனத்துறை விளையாட்டு போட்டிகள் கோவை வனக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விளையாட்டு கொடியை ஏற்றி , போட்டிகளையும் துவக்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கும்கி - டிமிக்கி
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: கோவையில் கும்கி யானைகளுக்கு டிமிக்கி கொடுத்து காட்டு யானைகள் ஓடி விடுகின்றன. ஆனால் அவை தப்பி எப்படி ஓடுகிறது என்பதே தெரியவில்லை. அதனால் அவற்றை பிடிக்கவும் முடியவில்லை.

சிங்கம், புலி
சிங்கம், புலி தாக்கி உயிரிழப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. யாரும் சிங்கம், புலி தாக்கி வேண்டுமென்றே உயிரிழப்பதில்லை" இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

சிங்கமே இல்லை
தமிழ்நாட்டில் யானைகள் தாக்கிதான் பயிர்களும், மனித உயிர்களும் சேதமாகி வருகிறது. அதேபோல, தமிழ்நாட்டு வனப் பகுதிகளில் ஒரு சிங்கம் கூட இப்போது இல்லை. எல்லா சிங்கங்களும் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில்தான் உள்ளன.

விவசாயிகள் அதிர்ச்சி
எனவே தமிழக காடுகளில் ஒரு சிங்கம் கூட இல்லாத நிலையில் சிங்கம் தாக்கி உயிரிழந்தால் அரசு நிவாரணம் தருகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பதை கேட்டதும் அங்கிருந்த விவசாயிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications