"அந்த" 2 வேலையை மட்டும் திமுக செஞ்சுட்டா லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் போட்டி இல்லை-சீமான் நிபந்தனை
கோவை: இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை, காவிரி நீர் தராத காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என இரண்டையும் திமுக செய்துவிட்டால் வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது: இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இஸ்லாமிய சிறை கைதிகளை திமுக அரசு விடுதலை செய்து காண்பிக்கட்டும். இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்துவிட்டால் லோக்சபா தேர்தலிலேயே நாம் தமிழர் கட்சி போட்டியிடாது.

அதேபோல காவிரி நீர் பிரச்சனை. காவிரி நீர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர கர்நாடகா காங்கிரஸ் அரசு மறுக்கிறது. அப்படியான காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு காங்கிரஸை திமுக கழற்றிவிடட்டும். இதனை திமுக செய்துவிட்டால் நாம் தமிழர் கட்சி 2024-ம் ஆண்டு தேர்தலிலேயே போட்டியிடமாட்டோம்.
அதேபோல ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என கூறுகின்றனர். அப்படி பிரதமர் மோடி, ராமநாதபுரத்தில் போட்டியிடும் நிலை உருவானால் திமுக எதிர்த்து போட்டியிட்டு வேட்பாளரை நிறுத்தட்டும். ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளர், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சி திமுக வேட்பாளரை ஆதரிக்கும். இதை திமுக செய்ய தயாரா? இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications