அண்ணாமலை அடித்துக் கொண்ட சாட்டை மாறியதா? முதலில் கொண்டு வந்தது எங்கே? நெட்டிசன்கள் விமர்சனம்
கோவை: தடிமனான தாம்பு கயிறாலான சாட்டை கொண்டு வரப்பட்ட நிலையில் அதை விட்டுவிட்டு பருத்தியால் ஆன சாட்டையால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடித்துக் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் விரைவில் திமுக அரசை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்வதாக அறிவித்தார்.

மேலும் திமுக அரசை பதவியிலிருந்து இறக்கும் வரை தன் காலில் காலணியோ ஷூவோ அணிய மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 48 நாட்களுக்கு முருகனின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட கோயில்களுக்கு செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை கோவையில் உள்ள அவரது வீட்டின் வாயில் முன்பு சாட்டையடி சம்பவத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக தாம்பு கயிற்றால் செய்யப்பட்ட தடிமனான சாட்டை கொண்டு வரப்பட்டது. ஆனால் கொண்டு வரப்பட்ட சாட்டைக்கு பதிலாக அவர் பருத்தியால் ஆன சாட்டையால் அடித்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தடிமனான சாட்டைக்கு பதிலாக காட்டன் சாட்டையை மாற்றியது யார், எப்படி மாற்றப்பட்டது, தொண்டர்கள் யாராவது தடிமனான சாட்டையால் அடித்துக் கொண்டால் அண்ணாமலைக்கு காயங்கள் ஏற்படும் என மறுப்பு தெரிவித்ததால் சாட்டை மாற்றப்பட்டதா?
பாஜக நிர்வாகிகளின் வேண்டுகோளுங்கிணங்க அண்ணாமலை சாட்டையை மாற்ற சம்மதித்தாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இன்று காலை அண்ணாமலை வெறுங்காலில் நின்றுக் கொண்டு பச்சை வேட்டியில் வெறும் உடம்பில் சாட்டையால் அடித்துக் கொண்ட போது கட்சி நிர்வாகிகள் எல்லாம் திமுக அரசுக்கு எதிரான பதாகைகளை வைத்திருந்தனர். முகத்தையும் இறுக்கமாக வைத்திருந்தனர்.
முதலில் 6 அடிகள் மட்டுமே அடித்துக் கொள்ள அண்ணாமலைக்கு நிர்வாகிகள் வேண்டுகோள் வைத்தனராம். 6 அடிகளை அடித்த அண்ணாமலை 7ஆவதாக அடித்துக் கொண்டதை பார்த்த நிர்வாகிகள் அதிர்ந்தனர்.
மேலும் 8ஆவது முறையாக சாட்டையை சுழற்றிய போது அவரை ஓடி வந்து நிர்வாகிகள் தடுத்து கட்டி அணைத்துக் கொண்டனர். சாட்டையையும் பறித்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சாட்டை அடி குறித்து விசிக வன்னியரசு தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: இன்று தமிழ்நாட்டில் இப்படி சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பதை காண்பது அரிது.
ஆனால், பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அவர்கள் ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத் தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார்.
தெருக்களில் சாட்டையால் அடித்து பிச்சை கேட்பவர்களை விட, அண்ணாமலையின் செயல்பாடு அநாகரீகமானது.
இப்படி செய்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அல்லது கவன ஈர்ப்புக்காக செய்பவர்களாக இருக்க வேண்டும். இதில் பாஜகவும் அண்ணாமலையும் என்ன ரகம் என்பதை மக்களே புரிந்து கொள்ளட்டும். இவ்வாறு வன்னியரசு தெரிவித்துள்ளார்.
அது போல் திமுக ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. வருத்தத்துக்குரிய சம்பவம். அந்த மாணவி புகார் கொடுத்த சில மணிநேரங்களில் குற்றவாளி கைது செய்யப்பட்டாகிவிட்டார்.
இன்று சாட்டையால் அடித்துக் கொள்ளும் அண்ணாமலை பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தின் போது எங்கே போனார்? அதில் அந்த குழந்தைகள் எல்லாம் கதறுனாங்களே, அண்ணா விட்டுடுங்க என ! அப்போது ஏன் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications