வேற லெவலில் பாய ரெடியாகும் கோவை! இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.. கோவையில் எங்கு அமைகிறது
கோவை: இந்தியாவில் படுவேகமாக வளரும் நகரங்களில் ஒன்றாக கோவை இருக்கும் நிலையில், இப்போது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு கோவை ரெடியாகி வருகிறது.
இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் டாப் இடத்தில் கோவை இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக கோவை இருக்கிறது.

கோயம்புத்தூர் தொழில் நகராக மட்டுமின்றி ஐடி துறையிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து அதிக ஐடி நிறுவனங்கள் இருக்கும் நகரங்களில் ஒன்றாகவும் கோவை இருக்கிறது.
இது மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் கோவை வேகமாக முன்னேறி வருகிறது. இதற்கிடையே கோவை நகரில் இப்போது பொறியியல் வசதி மையம் தவிர விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு இரண்டு தொழில் பூங்காக்கள் அமைய உள்ளதாக டிட்கோவின் சிறப்புச் செயலாளரும் திட்ட இயக்குநருமான பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தியத் தொழில் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) ஆகியோருடன் இணைந்து சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டிட்கோ சிறப்புச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, "கோவை வாரப்பட்டியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலும், சூலூரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலும் பூங்காக்கள் அமைக்கப்படும். ஒரு பூங்காவிற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மற்றொன்றில் நில அளவீடு பணிகள் தொடங்கியுள்ளது.
இவை தவிர 400 கோடியில் பொறியியல் வசதி மையமும் அமைக்கப்படும். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான கருவிகளை வடிவமைப்பதில் இருந்து உற்பத்தி வரை இது அனைத்து நிலைகளிலும் நமக்கு உதவும்" என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் ஹன்ஸ் ராஜ் வர்மா கூறுகையில், "இந்த துறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கூட்டங்கள் நடத்தப்படும். நாம் சர்வதேச விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக இருக்க நீர் மற்றும் மின் நுகர்வை குறைக்க வேண்டும். தோல், பால் உள்ளிட்ட ஆறு துறைகள் குறித்த கூட்டம் மே 31ம் தேதி முதல் ராணிப்பேட்டையில் நடைபெறுகிறது. இதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் நன்கு வளரும்" என்று அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 77 பொறியியல் கல்லூரிகள் இருக்கும் நிலையில், அங்கே பட்டம் பெறும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் பாதுகாப்புத் துறை முக்கிய பங்காற்றும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புத் துறையின் வளர்ச்சியில் கோவையும், தமிழகமும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் இது நாட்டின் எதிர்காலத்திற்கும் பெரியளவில் உதவும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கோவை நகரில் ஏற்கனவே சூலூர் பகுதியில் விமானப்படைத் தளம் உள்ளது. இந்நிலையில், இந்த சூலூர் விமானப்படைத் தளம் அருகே தான் பாதுகாப்புத் துறைக்கான பூங்காவை அமைக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல வாரப்பட்டியில் மற்றொரு பூங்காவை அமைக்க முடிவு செய்துள்ளனர்.
இது கோவையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நிச்சயம் முக்கிய பங்கை வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.












Click it and Unblock the Notifications