கோவை வரும் நிர்மலா சீதாராமன்.. ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் இணைகிறாரா?.. வானதி சீனிவாசன் சொன்ன பதில்
கோவை: ஓ.பன்னீர் செல்வத்தை பாஜவில் இணைப்பது பற்றி எனக்கு தெரியாது என்று பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். நாளைய தினம் கோவை வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கதர் பவன் விற்பனை நிலையத்தில் மகாத்மா காந்தியடிகள் மற்றும் காமராஜர் ஆகியோரின் திரு உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வானதி சீனிவாசன், அங்குள்ள கைத்தறி கதர் ஆடைகள், பட்டு சேலை மற்றும் கைவினைப் பொருட்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்

செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், காதி பொருட்கள் விற்பனை ரூ.33,000 கோடியில் இருந்து 9 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ளூர் பகுதிகளில் தயாரிக்கப்படுகின்ற பொருட்களை, சர்வதேச பொருட்களை, காதி பொருட்களை நாம் காசு கொடுத்து வாங்க வேண்டும். அதன் காரணமாக உள்ளூர் பொருட்கள் மேம்பாடு மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்படுகின்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று மோடி கூறியுள்ளார்.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற வகையில் 'Vocal for Local' என பிரதமர் மோடி எங்கு சென்றாலும் அதனை பயன்படுத்தி வருகிறார். பிரதமர் மோடி நம் ஊர் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காதி விற்பனை 33 ஆயிரம் கோடியிலிருந்து 9 ஆண்டுகளில் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் தயாரிக்க கூடிய பொருட்கள் மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுப்பதால் உலக நாடுகள் பட்டியலில் இந்திய பொருட்களுக்கான தனித்துவமான ஒரு மார்க்கெட்டை உருவாக்குகின்றன. மேலும் நம் நாட்டின் முன்னேற்றமும் உறுதிப்படுத்துகின்றது. பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் அனைத்து விருந்தினர்களுக்கும் நமது நாட்டில் பாரம்பரிய முறைப்படி அந்தந்த பகுதியில் கிடைக்கக்கூடிய பொருட்களை பரிசாக கொடுத்தார். அயல்நாடுகளுக்கு செல்லும்போது கூட அங்குள்ள தலைவர்களுக்கு நம்மூரில் கிடைக்கக்கூடிய கைவினைப் பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார்.
ப.சிதம்பரம் 33 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதவை காங்கிரஸ் மனநிலையில் இருந்து பேசி வருகிறார், அதை கொண்டு வந்து இருப்பவர் பிரதமர் மோடி. நம்முடைய பிரதமர் எதை சொல்கிறாரோ அதை செய்யக்கூடியவர். காங்கிரஸ் காலத்தில் போல சொல்லிவிட்டு கொண்டு வர மாட்டார்கள் என அவ்வாறு கருத கூடாது. பெண்களுக்கான உரிமை கண்டிப்பாக அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. கட்சி தேசிய தலைமை, முக்கியமான தலைவர்களை சந்தித்து கூட்டத்தில் கலந்துகொண்டது சிறப்பாக இருந்தது. சட்டீஸ்கர் மாநிலம், ராஜஸ்தான் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் கோவை மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை பீளமேடு பகுதியில் தூய்மை பாரத நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேலாக மத்திய அரசு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார் வானதி சீனிவாசன். அதே போல ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் இணையப்போகிறாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் எனக்கு தெரியாது என்றே பதில் அளித்து உள்ளார்.
அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம்,
கடந்த ஒரு மாத காலமாக பாஜக தேசிய தலைமையிடம் இருந்து என்னிடம் தினமும் பேசி வருகிறார்கள் என்று கூறினார். பாஜக தேசிய தலைமையிடம் மாநில தலைமையிடம் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க எடப்பாடிக்கு என்ன தகுதி உள்ளது. பாஜக மூன்றாவது முறையும் நாட்டை ஆள்வதற்கான தகுதியை பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயராக உள்ளோம். அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும் என்றும் தெரிவித்தார் ஒ.பன்னீர் செல்வம். இந்த நிலையில்தான் ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications