"கொடைவள்ளல் ஸ்டாலின் தந்த.. பொங்கல் அரிசியை மாட்டுக்கு போட்டால் அதுகூட முறைக்குது.." விளாசிய ஓபிஎஸ்
கோவை: கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு சேகரித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனியில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் பரப்புரை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

ஒ.பன்னீர்செல்வம்
அப்போது பேசிய ஒ.பன்னீர்செல்வம், கொரொனா தொற்றை அதிமுக அரசு சிறப்பாகக் கையாண்டது எனத் தெரிவித்தார். திமுக அரசு அதைச் சரியாகக் கையாளவில்லை எனக் கூறிய அவர், திமுகவினர் ஏதாவது திட்டங்கள் உதவிகள் கொடுத்தார்களா எனக் கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாகச் சிறப்பான அதிமுக ஆட்சி நடைபெற்றது எனவும், எந்த குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

காவேரி விவகாரம்
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், "காவேரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போராடித் தீர்ப்பினை கொண்டு அரசாணை பெற்றுக் கொடுத்தவர் ஜெயலலிதா. 50 ஆண்டுகளில் இல்லாத சாதனையை 5 ஆண்டுகளில் கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அதிமுக செய்து காட்டியது. திமுக சட்டமன்ற தேர்தலின் பொது பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தது ஆட்சிக்கு வந்துள்ளது.

திமுக மீது அட்டாக்
505 வாக்குறுதிகளை திமுக வீதி வீதியாகப் பிரசாரம் செய்தது. அதை நம்பிய மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த கட்சி திமுக. திமுகவின் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்றார்கள். ஆனால், அதை இன்னும் செய்யவில்லை. 5 சவரனுக்கு நகை அடகு வைத்தால் கடன் தள்ளுபடி என்றார்கள். 50 லட்சம் பேர் நகை அடகு வைத்தனர். இப்போது யாருக்குத் தகுதி என ஆய்வு செய்து வருகின்றனர் என்கின்றனர். 37 லட்சம் பேர் நகைகளை அடகு வைத்து நடுத்தெருவில் இருக்கின்றனர். 13 லட்சம் பேர் மட்டும் தகுதி என்கின்றனர். இதேபோல பெண்களுக்கு 1000 ரூபாய் வீடு தோறும் உதவித் தொகை வரவில்லை. அதனால் பொதுமக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.

கொடை வள்ளல் ஸ்டாலின்
பொங்கல் பரிசாக 2500 ரூபாயுடன் பரிசுப் பொருட்கள் தொகுப்பை அதிமுக அரசு கொடுத்தது. கொடை வள்ளல் ஸ்டாலின் ரூ 5000 கொடுக்க வேண்டும் என்றார். இப்போது அவர் எதுவும் கொடுக்கவில்லை. பொங்கல் பரிசு பொருட்களை வடநாட்டில் இருந்து வாங்கி இருக்கின்றனர். இங்கு வாங்கினால் தெரிந்து விடும் என்பதற்காகவே அவர் வட மாநிலத்தில் இருந்து வாங்கியுள்ளார். பொங்கலுக்கு மக்களுக்குக் கொடுத்த அரிசியை மாட்டுக்குப் போட்டால் அந்த மாடு நம்மை முறைக்குது. பொங்கல் பரிசுப் பொருட்களின் தரம் குறித்து விசாரணை கமிசன் அமைத்து விசாரணை செய்ததில், அது உண்மை என நிரூபணம் ஆகியிருக்கின்றது.

பெரியார் கனவை நனவாக்கியது ஜெயலலிதா
பெரியார் கண்ட கனவை நனவாக்கியது ஜெயலலிதா மட்டும் தான். உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும். அதிமுக ஆட்சி தான் சிறந்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இரட்டை இலை சின்னத்தை நம்பி களத்தில் இருப்பவர்களை வெற்றி பெற வைக்கும் கடமை அதிமுக கட்சியினர் அனைவருக்கும் இருக்கின்றது.

எஃகு கோட்டை
கடந்த தேர்தலில் சின்ன சரிவினால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இயற்கையே அதைச் சரி செய்துவிட்டது. தமிழகத்தில் ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கின்றது. மக்கள் நம்மை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றனர். கொங்கு மண்டலம் இன்று வரை அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகின்றது. பெரியார்,அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் எண்ணங்களை ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா வழியில்
மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. 5.5 லட்சம் வீடுகளை மக்களுக்குக் கட்டிக்கொடுத்தவர் எனவும். இப்படிப் பல திட்டங்கள் மக்கள் மனதில் அசைக்க முடியாத திட்டங்களாக இருக்கின்றது. ஜெயலலிதா கொண்டு வந்த சாதனை திட்டங்களைத் தடம் பிறழாமல் அவரை தொடர்ந்து செய்து காட்டியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. 100 யூனிட் மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், வரி வருவாயில் 3 ல் ஒரு பங்கைக் கல்விக்கு ஒதுக்கியது எனப் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications