“நோ”.. கைதானவர்களை யார் என்றே தெரியாது? கோவை வட மாநிலத்தவர் மீது “அட்டாக்”.. இந்து முன்னணி மறுப்பு
வட மாநிலத்தவர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்களுக்கும் இந்து முன்னணிக்கும் சம்பந்தமே இல்லை என்று அந்த அமைப்பு விளக்கம் அளித்து இருக்கிறது.
கோவை: இந்து முன்னணியை சேர்ந்த கும்பல் கோவையில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் பானிபூரி வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் இந்து முன்னணிக்கும் சம்பந்தமே இல்லை என்று அந்த அமைப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது.
கோவையில் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளியான மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கௌதம் சியாமல் தனது வட மாநில நண்பர்களுடன் தங்கி இருந்து வருகிறார்.
கோவை இடையர் தெருவில் சக வடமாநில தொழிலாளர்கள் ஜெகத், தன்மாய் ஜனா ஆகியோருடன் நடந்து சென்றுகொண்டு இருந்தபோது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களும் அவ்வழியாக நடந்து சென்று இருக்கின்றனர்.

வட மாநில தொழிலாளர்கள்
அப்போது சியாமல் கட்டுவாவும் அவரது நண்பர்களும் வழிவிடாமல் சென்றதாக கூறி இந்து முன்னணியை சேர்ந்த பிரகாஷ், சூரிய பிரகாஷ், கல்லூரி மாணவர்களான பிரகதீஷ் மற்றும் வேல்முருகன் ஆகியோர் கும்பலாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதில் அவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

பானிபூரி வியாபாரிக்கும் அடி
அத்துடன் அதே பகுதியில் பானிபூரி கடை நடத்தி வந்த மோனோ, ஷேக் சவான் ஆகிய மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்களையும் இந்து முன்னணியை சேர்ந்த சூரியபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கி இருக்கிறார்கள். இந்த தகவல் அறிந்த வட மாநில தொழிலாளர்கள் அங்கும் கும்பலாக திரண்டு இருக்கிறார்கள்.

கைதான 4 பேர்
இதனை அடுத்து கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர் கௌதம் சியாமல் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வட மாநில தொழிலாளர்களை தாக்கிய சூரிய பிரகாஷ், பிரகாஷ், கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்து முன்னணி விளக்கம்
கோவையில் வட இந்தியாவை சேர்ந்தவர்களை இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் தாக்கியதாக காவல்துறை தெரிவித்து இருக்கும் நிலையில், இந்து முன்னணி அமைப்பு இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. கைது செய்யப்பட்ட சூரிய பிரகாஷ், பிரகதீஷ் ஆகியோருக்கும் இந்து முன்னணிக்கும் தொடர்பில்லை என அந்த அமைப்பு விளக்கி உள்ளது.

தமிழர்களுக்கு எதிராக வதந்தி
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தி பேசியதற்காக வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகவும் கழுத்தறுத்து அவர்கள் கொலை செய்யப்படுவதாகவும் போலியான வீடியோக்களையும், பழைய வீடியோக்களையும் வட மாநிலத்தவர்கள், அம்மாநில ஊடகங்கள் பரப்பி வந்தன.

காவல்துறை நடவடிக்கை
பீகார் மாநில பாஜகவின் ட்விட்டர் பக்கம், பாஜக செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட வதந்திகள் பரவி உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில மக்கள் மத்தியில் தமிழ்நாட்டுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை மறுத்த தமிழ்நாடு காவல்துறை வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications