கோவை பாஜக அலுவலகத்தின் முன்பு "உருண்டு வந்த" பெட்ரோல் குண்டு.. வெளியானது சிசிடிவி காட்சி
கோவை: கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு கோவை சித்தாபுதூர் பகுதியில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது.
பொள்ளாச்சியில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. கார், ஆட்டோ கண்ணாடிகள் சேதம்
பெட்ரோல் குண்டு
இந்த பெட்ரோல் குண்டு உருட்டி விடப்பட்டுள்ளது. அது ரோடு வழியாக உருண்டு வருவதும், பாஜக அலுவலகத்தின் காம்பவுண்ட் சுவர் அருகே போய் நிற்பதும் அருகே இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
காம்பவுண்ட் சுவர்
இந்த பெட்ரோல் குண்டு காம்பவுண்ட் சுவரில் பட்ட போதிலும் வெடிக்கவில்லை, இதனால் யாருக்கும் எந்தவித காயமோ பொருட் சேதமோ ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கோவை ஒப்பணக்கார தெருவில் உள்ள துணிக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
5 தனிப்படைகள்
இவை தொடர்பாக, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அது போல் பொள்ளாச்சி அருகே குமரன் நகரில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
கார்கள், ஆட்டோக்கள்
இதில் இரு கார்கள், இரு ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் சென்னை திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவையில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து நள்ளிரவு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.