மோடி வருகை: 3 மணி நேரத்துக்கு மூடப்படும் ஜிடி மேம்பாலம்.. உச்சகட்ட பாதுகாப்பில் கோவை
கோவை: கோவை மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வரும் நவம்பர் 19 ஆம் தேதி (நாளை) வருகை தரவுள்ளார். பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு மாவட்டத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், அதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார்.

அவரின் வருகை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவையின் முக்கியப் புள்ளிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளையும் மோடி சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்துப் பேசுகிறார். நாளை மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
பிரதமர் கலந்துரையாடல்
விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு பிரதமர் செல்லவுள்ளார். அங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பேசவுள்ளார். தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கவுள்ளார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர், பிரதமர் மோடி மாலை 3.15 மணியளவில் கொடிசியாவில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். கோவை மாவட்டத்துக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரெட் ஜோன்
பிரதமர் வருகையை முன்னிட்டு சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள்அரங்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் தற்காலிகமாக 'ரெட் ஜோன்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூடப்படும் ஜிடி நாயுடு மேம்பாலம்
அவினாசி ரோடு, ஜிடி நாயுடு மேம்பாலம் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும்போது, நவம்பர் 19 ஆம் தேதியன்று நண்பகல் 12 முதல் 3.00 மணி வரை மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் அதற்கு தகுந்தாற்போல் மாற்று பாதையை தேர்வு செய்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, கொடிசியா நிகழ்ச்சிக்கு வருபவர்கள் 12.00 மணி வரை மட்டுமே கொடீசியா ரோடு வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 12.00 மணிக்கு மேல் கன்னியா குருகுலம் பள்ளி சாலை வழியாக மட்டுமே கொடீசியா நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும்.
19.11.2025 ஆம் தேதியன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது. நவம்பர்
18, 19 ஆகிய இரண்டு நாட்கள் கால் டாக்ஸிகள் மற்றும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்திற்குள் Parking செய்ய அனுமதியில்லை. எனவே, மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு கொடுத்து, தங்களது பயணத் திட்டம் மற்றும் பயணப் பாதையை வகுத்து விரைவான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கோவை மாநகர போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.












Click it and Unblock the Notifications