"இந்தியாவின் பாதுகாப்பிற்காக பிரதமர் மோடி நமக்கு தேவை!" கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
கோவை: கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, திமுக மற்றும் அதிமுக கட்சிகளைக் கடுமையாகச் சாடினார். மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு பிப். 14ஆம் தேதி ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பு மாநிலத்தை அதிர வைப்பதாக இருந்தது. அன்றைய தினம் மதிய நேரத்தில் சற்று நேர இடைவெளியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

மொத்தம் 13 இடங்களில் நடத்தப்பட இந்த குண்டுவெடிப்பில் மொத்தம் 58 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்போது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அண்ணாமலை: இந்த தொடர்க் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 26 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்றைய தினம் ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "கோவை 1998 தொடர் குண்டுவெடிப்பின் ஆபத்தில் இருந்து இன்னும் முழுமையாகத் தப்பவில்லை. கடந்த 2022இல் கூட கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே வெடிபொருட்களுடன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
தமிழ்நாடு அரசு: ஆரம்பத்தில் இதை வெறும் சிலிண்டர் வெடிப்பு என்று தான் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், அதன் பிறகே உண்மை காரணம் தெரிந்தது. இதில் தற்கொலைப்படையாக உயிரிழந்த ஜமேஷாமுபின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் வெடிபொருள் உள்ளிட்ட 109 பொருட்களை என்ஏஐ அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் தொடர்ச்சியாக மாநிலத்தில் 12 மாவட்டங்களில் 86 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் சத்தியமங்கலம் காட்டில் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் ஆறு பேர் மீது குற்றப்பத்திரிக்கையும் கூட தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக இந்த விவகாரத்தில் உண்மையைச் சொல்லாது. உண்மையை மறைத்தே தான் பேசுவார்கள். கோவை இன்னும் கூட ஆபத்தில் இருந்து தப்பவில்லை என்பதற்கு இதுவே சாட்சி
திமுக, அதிமுக மீது அட்டாக்: இதற்கிடையே கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளில் சிலரை விடுவிக்க வேண்டும் என ஆளும் கட்சியும் சொல்கிறது. ஆண்ட கட்சியும் சொல்கிறது. இரண்டு சதவிகித சிறுபான்மை வாக்குகளைப் பெறவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூட அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. ஆனாலும் அவர்களை வெளியே கொண்டு வர இரு கட்சிகளும் முயல்கின்றன" என்றார்.
தொடர்ந்து மோடி அரசு செய்த சாதனைகள் குறித்துப் பட்டியலிட்ட அவர், "வரும் காலத்தில் உலகின் பல நாடுகள் வல்லமை கொண்ட நாடுகளாக மாறும். அந்த வரிசையில் இந்தியா நிச்சயம் இடம்பெறும். மோடி தலைமையிலான நமது நாடு இதற்காகத் தயாராகி வருகிறது. பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டில் எந்தவொரு குண்டுவெடிப்பும் ஏற்படவில்லை.. அதே நிலை நீடிக்க வேண்டும்.
மோடி தேவை: வன்முறைகள், குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். நமது நாட்டிற்குப் பிரதமர் மோடி எதற்குத் தேவையோ இல்லையோ, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி தேவை.. இதற்காகவே அவரது தலைமையிலான பாஜக அரசு மீண்டும் வர வேண்டும் என்கிறோம்... எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார். அண்ணாமலை பிரதமர் மோடி குறித்து பேசும் போது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்












Click it and Unblock the Notifications