டாஸ்மாக் ஊழியருக்கு அரிவாள் வெட்டு.. டாஸ்மாக் கடைகள் அடைப்பு.. கோவையில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு
கோவை: கோவை மாவட்டம் இடிகரை பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக டாஸ்மாக் கடை(எண்:1621) செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சிதம்பரம் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று சிதம்பரம் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டார்.
நேற்றிரவு சிதம்பரம் பணி முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.பின்னர் சிதரம்பரத்தை அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.

அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்
மேலும் அவர் வைத்திருந்த பேக்,போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் சிதம்பரத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
அங்கு சிதம்பரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் ஊழியர் மீதான தாக்குதலால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து சமூக விரோதிகளால் தாக்கப்படுவதையும், இடிகரை டாஸ்மாக் ஊழியர் சிதம்பரத்தை நேற்றிரவு கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிமகன்கள் புலம்பல்
கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று காலை 10 மணி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் கோவையில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் குடிமகன்கள் புலம்பி தவித்து வருகின்றனர். வேறு ஏதும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதை தவிர்க்க போலீசார் குவிக்ப்பட்டுள்ளனர்.

தொடர்கதையாகி வருகிறது
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் மாற்றுத்திறனாளி துளசிதாஸ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மேலும், விற்பனையாளர் ராமு என்பவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை கண்டித்து டாஸ்மாக் அனைத்து சங்க நிர்வாகிகள் ஏற்க்கனவே போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் தற்போதும் டாஸ்மாக் ஊழியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் டாஸ்மாக் ஊழியர்களை அதிரிச்சியில் உறைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications