ஒரு போஸ்டர்.. மத மோதலை தூண்டும் வகையில் விவாதம்! அர்ஜூன் சம்பத், தடா ரஹீம் மீது வழக்குப்பதிவு!
கோவை : பாபர் மசூதி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீதும், அதற்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த தடா ரஹீம் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் ஒரு போஸ்டரை ட்விட்டரில் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீதும் அதற்கு பதில் அளித்து பதிவிட்ட தடா ரஹீம் மீதும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு நாளான நேற்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், மத மோதலை ஏற்படுத்தும் வகையில் அர்ஜூன் சம்பத்தும், தடா ரஹீமும் கருத்து தெரிவித்தனர்.

பாபர் மசூதி இடிப்பு நாள்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற மதக் கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். எனவே ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி கருப்பு தினமாக இஸ்லாமியர்கள் அனுசரித்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்களில் காவல்துறை சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

தீவிர கண்காணிப்பு
அசம்பாவிதங்களைத் தவிர்க்க தீவிர சோதனை, போலீஸ் பாதுகாப்பு ஒருபுறம் இருக்க, சமூக வலைதளங்களில் யாரேனும் மத மோதலைத் தூண்டும் வகையில் பதிவு செய்கிறார்களா என்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் ஆகியோர் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டுள்ளதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடிமைச்சின்னம்
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் பாபர் மசூதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டார். "அடிமைச்சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றித் திருநாள்!" எனக் குறிப்பிட்டிருந்த இந்து மக்கள் கட்சியின் போஸ்டரை பகிர்ந்திருந்தார். இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பதிவு இருந்தது.

அவமானச்சின்னம்
அர்ஜூன் சம்பத்தின் பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். "அடிமைச்சின்னம் அகற்றப்பட்ட நாள் என நீங்க போஸ்டர் போடுவது சரி என்றால் ? பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் அவமானச்சின்னம் எழுப்ப சதி செய்யப்பட்ட நாள் என நான் பதிவு போடுவதில் என்ன தவறு?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார் தடா ரஹீம்.

இருவர் மீதும் வழக்குப்பதிவு
இந்த இரு பதிவுகளையும் கவனித்த கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அர்ஜூன் சம்பத் மற்றும் தடா ரஹீம் ஆகிய இருவர் மீதும் 153 ஏ மற்றும் 505 (2) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அர்ஜூன் சம்பத், தடா ரஹீம் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அம்பேத்கருக்கு காவி
இதேபோல, சட்ட மேதை அம்பேத்கரின் நினைவுநாளும் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அம்பேத்கரின் உருவபடத்திற்கு காவி சட்டை அணிவித்தும், குங்கும பொட்டு வைத்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த போஸ்டரை அச்சடித்த இந்து மக்களை கட்சியை சேர்ந்த நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அம்பேத்கருக்கு காவி சாயம் பூசமாட்டோம் என அர்ஜூன் சம்பத், நீதிமன்றத்தில் உத்தரவாத கடிதம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications