கோவை ஜோஸ் ஆலுக்காஸ் 200 பவுன் கொள்ளை.. மர்ம நபர் எங்கிருந்து வந்தார்? முக்கிய க்ளூ! போலீஸார் தகவல்
கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 200 சவரன் நகைகளை திருடிய மர்ம நபர் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக் கடை ஜோஸ் ஆலுக்காஸ். மிகவும் பரபரப்பான சாலையில் இயங்கி வரும் இந்த நகைக் கடையை நேற்று முன் தினம் இரவு பணியாளர்கள் கடையை அடைத்துவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் கடையை திறந்து பார்த்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பதறிய ஊழியர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு காவல் துறையும் தடயவியல் துறையும் சோதனை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் கடைக்கு அருகே ஒரு நபர் நுழையும் சந்துவழியாக முதல் தளத்தில் ஏசி வெண்டிலேட்டர் பகுதியை துளையிட்டு மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தது தெரியவந்தது. ஊழியர்கள் கடையை திறந்ததும் வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவில் நகைகள் மாயமானதை அடுத்து மேலாளரின் அறிவுறுத்தலின்படி நகைகள் சரிபார்க்கப்பட்ட போது 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்துதான் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நகைக் கடைக்குள் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள்ளாக மர்ம நபர் கைவரிசையை காட்டியுள்ளார்.
ஒரே இடத்தில் இருந்து நகைகளை திருடாமல் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக திருடியுள்ளார். 5 தனிப்படைகள் அமைத்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் திருட வந்தவர் பழைய திருடன் அல்ல, புதிய நபராக இருக்கலாம். அவருடைய நடை உடை செயல்பாடுகளை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.
அது போல் ஜோஸ் ஆலுக்காஸ் கடைக்கு பக்கத்தில் கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. அங்கிருப்போரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. மர்ம நபர் குறித்து சில தடயங்கள் கிடைத்துள்ளன. மர்மநபர் பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்துள்ளார். அங்கு நகைகளை திருடிவிட்டு பின்னர் தனது சட்டையையும் முகமூடியையும் அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பியுள்ளார்.
ஆட்டோவில் உக்கடம் பேருந்து நிலையம் சென்ற அவர் அங்கிருந்து பொள்ளாச்சி சென்றுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட நகைகள் தோராயமாக 150 முதல் 200 பவுன் வரை இருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications