தினுசு கண்ணா தினுசு! உடைந்து போன அதிமுக கூட்டணி! ஊருக்கே லட்டு கொடுத்து கொண்டாடிய பொள்ளாச்சி பாஜக!
பொள்ளாச்சி: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் அறிவித்ததுதான் தாமதம்.. இந்த் அறிவிப்பை அண்ணா திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவது ஆச்சரியமில்லை. ஆனால் பாஜக தொண்டர்களோ இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி விமர்சித்தார். பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். பின்னர் அண்ணாவை பற்றி, பெரியாரை பற்றி, எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுகிறார் அண்ணாமலை. எங்களுடைய முன்னோடிகளை விமர்சனம் செய்வதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்த விமர்சனங்களுக்கு அதிமுகவினர் தக்க பதிலடி கொடுப்பார்கள். ஒரே விஷயம்தான் மேலே சொல்லியும் இவரு அடங்கமாட்டார் எனில் மேலே சொல்லித்தானே நடக்கிறது. தற்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இதைத்தான் இப்போது சொல்ல முடியும். எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன் என்றார்.

மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாமல் போனால் எங்களுக்கு இழப்பு இல்லை. அவர்களுக்குதான் இழப்பு. பாஜக என்பது அதிமுகவுக்கு வேஸ்ட் லக்கேஜ்; எக்ஸ்ட்ரா லக்கேஜ் அல்ல. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையால் நோட்டாவை கூட தாண்ட முடியாது. அத்தனைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. கூட்டணி தர்மத்தை மீறக் கூடிய ஒருவரை அதிமுக தொண்டர்கள் மதிக்க வேண்டிய தேவை இல்லை. தன்மானத்தின் அடிப்படையில் அதிமுக தொண்டர்கள் தாங்கமாட்டார்கள். அதனால்தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்கிற நிலைப்பாட்டைத் திரும்ப திரும்ப சொல்கிறோம் என்றார் ஜெயக்குமார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதாவது அண்ணாமலை சொன்னது சரி; ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறும் என்பதுதான் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கருத்து.
தமிழ்நாட்டில் பாஜகவால் தனித்தே போட்டியிட முடியாது என்பதை நன்றாக உணர்ந்த காரணத்தால் அதிமுக வெளியேற்றிவிட்டோம் என சொன்ன பிறகும் இல்லை இல்லை அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்கிறது தமிழ்நாடு பாஜக.
இதனிடையே பொள்ளாச்சியில் திடீரென பாஜகவினர் சாலைகளில் சென்ற பொதுமக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது பாரத் மாதா கீ ஜே கோஷமும் போட்டனர். அத்துடன், "அண்ணாமலை தனித்து போட்டியிடுகிறார்.. அதனால லட்டு தருகிறோம்" என ஒரு காரணத்தையும் சொன்னார்கள் பொள்ளாச்சி பாஜகவினர். சூப்பர் இல்ல!












Click it and Unblock the Notifications