ஆளுநர் ரவிக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடையை பார்சல் அனுப்பிய பொள்ளாச்சி திமுக! காக்கி டவுசர்-வெள்ளை சட்டை!
கோவை: ஆளுநர் ரவிக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடையை பார்சல் அனுப்பி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்கள் பொள்ளாச்சி நகர திமுக நிர்வாகிகள்.
ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி நிற டவுசர் 4 செட், வெள்ளை நிற சட்டை 4 செட் என அஞ்சல் அலுவலகம் மூலம் பார்சலில் அனுப்பியுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட இனத்தையே கொச்சைப்படுத்தி விட்டதாக கூறி பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் இந்த சீருடையை அனுப்பி வைத்திருக்கிறார்.

ஏற்கனவே தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கக்கோரியும் ஆளுநர் மீது இன்னும் சில குற்றச்சாட்டுக்களை கூறியும் உச்சநீதிமன்ற கதவை தட்டியுள்ளது தமிழக அரசு. அதுமட்டுமல்ல ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு போன்ற கட்சியின் சீனியர்கள் மூலமும் ஆளுநர் ரவிக்கு எதிராக அவ்வப்போது காட்டமான பதிலடிகளை கொடுத்து வருகிறது திமுக தலைமை.
இந்நிலையில் ஆளுநர் ரவி தொடர்ந்து திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்தி பேசுவதாகவும் பேசும் மேடைகளிலெல்லாம் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதமாகவே பேசி வருகிறார் எனவும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ள பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன், இனி ஆர்.எஸ்.எஸ். சீருடையையே ஆர்.எ.ரவி அணிந்து கொள்ளலாம் எனக் கூறி 4 செட் யூனிஃபார்மை பார்சல் அனுப்பியுள்ளார்.

திராவிட என்றொரு இனமே இல்லை என ஆளுநர் எப்படி கூறலாம் என்றும் திராவிட இனத்தையே இதன் மூலம் அவர் கொச்சைப்படுத்தி விட்டார் எனவும் பொள்ளாச்சி நகர திமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் மூலம் ஆளுநர் மற்றும் திமுக இடையேயான மோதல் இன்னும் முற்றக்கூடும் எனத் தெரிகிறது.
இன்று காலை கூட ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தச் சென்ற ஆளுநர் ரவி, தன்னிடம் கை கொடுத்த அமைச்சர் சேகர்பாபுவை கண்டுகொள்ளாமல் அவருக்கு பின்னால் நின்றவருக்கு வணக்கம் சொல்லியது குறிப்பிடத்தக்கது. தமிழக ஆளுநர் ஒருவருக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடை பார்சல் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications