பொள்ளாச்சி கொடூரம்… திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்
கோவை: பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவை சிறையிலிருக்கும் திருநாவுக்கரசை நேரில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்தது. கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், திருநாவுக்கரசை நீதிபதி முன் ஆஜர் படுத்துவதில் சிக்கல் இருந்தது.
இதனை அடுத்து, காணொலி காட்சி மூலம் திருநாவுக்கரசு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பத்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தின் சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டனர். விசாரணையை தொடர்ந்து நான்கு நாட்கள் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
4 நாள் டைம்.. பொள்ளாச்சி ஜெயராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சபரீசன் வக்கீல் நோட்டீஸ்
இதற்கிடையே, திருநாவுக்கரசின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டிலிருந்த பென்டிரைவ், லேப்டாப், மெமரி சிப்களை போலீசார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பொள்ளாச்சி வழக்கில் திருநாவுக்கரசை ஆஜர்படுத்த உள்ளதாக வெளியான தகவலையடுத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.