ஜெயிலில் பதற்றம்.. கைதிகள்- வார்டன்கள் இடையே பயங்கர மோதல்.. பிளேடால் கையை அறுத்துக்கொண்டு போராட்டம்!
கோவை: கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கைதிகள் தாக்கியதில் 4 சிறை வார்டன்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் தடுப்பு சட்டக் கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் குற்றங்களுக்கு தகுந்தவாறு வெவ்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று கோவை மத்திய் சிறையில் உள்ள கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கைதிகள் கடுமையாகத் தாக்கியதில் 4 சிறை வார்டன்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் கோவை மத்திய சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கைதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த சிறைக்காவலர்கள் ராகுல், மோகன்ராம், பாபுஜான், விமல்ராஜ் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சிறை வளாகத்தில் கைதிகள் மரத்தின் மீது ஏறி கைகளில் பிளேடால் கீறிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் கைதிகளை சமரசப்படுத்திய சிறைக் காவலர்கள், சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த மோதல் சம்பவம் காரணமாக கோவை மத்திய சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications