ஒன்னு ரெண்டு சீட்டுகெல்லாம் நாங்கள் போட்டியிட மாட்டோம்.. ராதிகாவும் போட்டியிடுவார்.. சரத்குமார்
கோவை: வரும் சட்டசபை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் மகளிரணி பொறுப்பில் உள்ள ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தெற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவை செல்வபுரத்தில் நடைபெற்றது. அப்போது நடந்த கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது சரத்குமார் பேசுகையில் 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியை பிடிப்பதற்கு எனது பிரச்சாரமும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் அதற்காக திமுக எனக்கு துரோகம் செய்துவிட்டதாக நான் கூறவில்லை.

தனி சின்னம்
அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. எங்கள் கட்சி அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது. அதிமுக சார்பில் கூட்டணி குறித்து பேசியபோது தான் எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்படும். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றாலும் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

இரண்டு இடங்கள்
சும்மா ஒன்று, இரண்டு இடங்களுக்கெல்லாம் போட்டியிட மாட்டோம். அதிக இடங்களில்தான் போட்டியிடுவோம். இந்த தேர்தலில் மகளிரணியில் உள்ள ராதிகாவும் போட்டியிடுவார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

பட்ஜெட்
மத்திய அரசின் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு நேரடி உதவிகள் எதுவும் இல்லை. ஆனால் மறைமுக உதவிகள் உள்ளன என்றார் சரத்குமார். நேற்றைய தினம் சரத்குமார் பேட்டி அளிக்கையில் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இருப்பதாகவும் ஆனாலும் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

முழு அரசியலில் ராதிகா
அது போல் ராதிகா சரத்குமாரும் தான் சின்னத்திரையில் இருந்து மெல்ல மெல்ல விலகிவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். குஷ்பு, ராதிகா என தேர்தலே களைகட்ட போகிறது என பொதுமக்கள் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.












Click it and Unblock the Notifications