அதிமுக நமக்கு பங்காளி! பாஜகவோ பகையாளி! அதனால் விடவே கூடாது! ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்!
கோவை: அதிமுகவை பொறுத்தவரை என்னைக்கு இருந்தாலும் திமுகவுக்கு அது பங்காளி தான் என்றும் ஆனால் பாஜகவோ பகையாளி எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். சுங்கச்சாவடிகள் மூலம் பாஜக கொள்ளையடித்து வருவதாகவும் சென்னையிலிருந்து கோவைக்கு காரில் வருவதற்குள் போது போதும் என்றாகி விடுவதாகவும் அந்தளவுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கார் வைத்திருப்போர் டோல்கேட்களில் பணம் கொடுப்பதற்கு பதில் பேசாமல் விமானத்திலோ, ரயிலிலோ சென்றுவிடலாம் என நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அதிமுகவை கூட கொஞ்ச காலத்துக்கு தள்ளி வைத்துவிடலாம் ஆனால் பாஜகவை தமிழ்நாட்டிற்குள்ளேயே விடக் கூடாது என பாய்ச்சல் காட்டினார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைவாசம் சென்றதால் கோவையில் கட்சிப் பணிகள் சுணக்கம் அடைய ஆரம்பித்துள்ளன. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டாலும் நிர்வாகிகள் மத்தியில் பழைய வேகம் இல்லை. இதனால் தான் கோவைக்கு ஒரு விசிட் அடித்து கட்சி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வந்து சென்றிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
அதிமுக நமக்கு பங்காளி என்றும் பாஜக தான் பகையாளி எனவும் ஆர்.எஸ். பாரதி பேசும் போது கூட்டத்தில் இருந்த திமுகவினர் சிலர் குரல் எழுப்பி வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications