கட்சிக்கு ஆள் சேர்க்கிறோம்.. “ரெய்டு” காரணமாக இரட்டிப்பு! மத்திய அரசின் ஒத்தாசைக்கு நன்றி - எஸ்டிபிஐ
கோவை: கோட்டைமேடு பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், ஆள் சேர்க்கைக்கு உதவிய மத்திய அரசுக்கு நன்றி என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.
கோவை கோட்டைமேடு பகுதியில் அமைந்து இருக்கிறது எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகம். நேற்று இரவு 8.30 மணிக்கு வந்த 10 க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்துறை திடீர் சோதனையை அடுத்து அப்பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி தொண்டர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தின் முன்பாக திரண்டு அமலாத்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

அமலாக்கத்துறை சோதனை
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சோதனை முடியும் வரை தொண்டர்கள் அலுவலகத்துக்கு வெளியிலேயே அமர்ந்து முழக்கமிட்டனர். சோதனை நிறைவடைந்த நிலையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

போலீஸ் குவிப்பு
இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனை காரணமாக அசம்பாவீதங்களை தவிர்க்க அப்பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டது. இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் எஸ்டிபிஐ அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைக்கு அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நெல்லை முபாரக்
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில், சோதனை என்ற பெயரில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தனது கைப்பாவையான மத்திய வருமான வரித்துறையின் மூலமாக ஏவிவிடும் ஒன்றிய பாஜக அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கண்டிக்கத்தக்கது.

ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும்
இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளின் மூலம் ஒருபோதும் ஜனநாயகத்தின் குரலை நசுக்கிவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற அராஜக அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு நன்றி
இதுகுறித்து எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் வெளியிட்டுள்ள பதிவில், "எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில், அதை மேலும் வலிமைப்படுத்த ஒன்றிய அரசு செய்த ஒத்தாசைதான் இந்த சோதனை. அதனால் கட்சியின் வளர்ச்சியும், வேகமும் இரட்டிப்பாகி உள்ளது. இனி வழக்கமான நமது சேவைகளையும், பணிகளையும் வேகப்படுத்த உதவிய, பாசிச ஒன்றியமே, நன்றி...!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications