விஜய் பற்றி கேட்டதுமே.. “ஏன் சார்.. நேரத்த வீணாக்கிட்டு..” சட்டென செந்தில் பாலாஜி சொன்ன பதில்!
கோவை: தவெக தலைவர் விஜய் பற்றிய கேள்விக்கு சட்டென செந்தில் பாலாஜி அளித்த பதில் சலசலப்பை ஏற்படுத்தியது. "சந்திக்கவே முடியாமல் இருக்கும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பவரை பற்றி எங்களிடம் கேள்வி கேட்டு ஏன் சார் எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீண் அடிக்கிறீர்கள்" எனக் கேள்வி எழுப்பினார் செந்தில் பாலாஜி.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கோவை மாவட்டத்தில் திமுகவின் பலத்தை நிரூபிக்க செந்தில் பாலாஜி தீவிரம் காட்டி வருகிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதி திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், "கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழக முதலமைச்சர் பல்வேறு சிறப்பு திட்டங்களை கோவை மாவட்டத்திற்கு வழங்கி இருக்கிறார்கள். குறிப்பாக பொள்ளாச்சிக்கு வழங்கி இருக்கிறார். அரசின் திட்டங்களை, முதலமைச்சர் ஸ்டாலினின் சாதனைகளை வீடு வாரியாக வாக்காளர்களை சந்தித்து மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி இந்த முறை கோவையில் 10 சட்டமன்ற தொகுதியை திமுக சார்பில் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள்: அனைவரையும் மகத்தான வெற்றி பெற செய்வோம் என்று உறுதி அளித்திருக்கிறோம்.
யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை கழகத் தலைவர் முடிவு செய்வார். எங்களைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் நினைத்து தேர்தல் பணிகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். ஆகவே வேட்பாளரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. முதலமைச்சர் தான் எங்களுடைய வேட்பாளர். ஆகவே எங்களது தேர்தல் பணி என்பது மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
எங்களது கூட்டணி மிக ஸ்ட்ராங்காக உறுதியாக உள்ளது. 2021ல் மக்கள் எப்படி மகத்தானதொரு வெற்றியை எங்களது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்களோ 2026 ஆம் ஆண்டிலும் ஒரு மகத்தான வெற்றியை வழங்க வாக்காளப் பெருமக்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்களும் தேர்தல் பணியில் இப்போது தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். வணிக பெருமக்கள், கட்சியினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இந்த கோரிக்கையை கழக தலைவரிடம் முன் வைத்து உள்ளோம். முதலமைச்சர் இதனை பரிசிலிப்பார்." எனத் தெரிவித்துள்ளார்.
தவெகவின் அரசியல் வருகையால் திமுகவுக்கு பாதிப்பா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, "எங்கள் துணை முதலமைச்சர் சொன்னது போல யாராவது அந்த கட்சிக்காரர்களை பார்த்து கேள்வி கேட்கிறீர்களா? உங்களுக்கு ரேட்டிங் வேணும் என்பதற்காக உங்களுக்கு ஒரு செய்தி வரவேண்டும் என்பதற்காக ஒரு பக்கமாக கேள்வி திருப்பி திருப்பி கேட்பதை விட இரண்டு பக்கமும் கேள்வி கேட்டால் அந்தக் கேள்வி ஒரு நியாயம் உள்ள கேள்வியாக இருக்கும். சந்திக்கவே முடியாமல் இருக்கும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பவரை பற்றி எங்களிடம் கேள்வி கேட்டு ஏன் சார் எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீண் அடிக்கிறீர்கள்" எனக் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications