கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச்
கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. . திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதில் சர்ப்ரைசாக கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கோட்டையான கோவையில் கால் பதிக்க கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை இறக்கியிருப்பதன் பின்னணியில் அறிவாலயம் பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.
கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை, மறுசீரமைப்புக்கு பிறகு நடைபெற்ற 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டமன்ற தேர்தல்களிலும் இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜுனன் 2 முறையும், தற்போது பாஜகவின் வானதி சீனிவாசன் சிட்டிங் எம்எல்ஏவாகவும் உள்ளனர். ஆனால் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இது கோவை மேற்கு தொகுதியாக இருந்தது.

கோவை தெற்கு தொகுதி
அப்போது திமுக 5 முறை அங்கு வெற்றி பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தின் இதய பகுதியில் அமைந்துள்ளது கோவை தெற்கு தொகுதி. பேருந்து நிலையம், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர மாவட்ட காவல் அலுவலகம், மாநகராட்சி பிரதான அலுவலகம் உள்ளிட்டவை இங்கு தான் உள்ளது. சிறுபான்மை மக்கள் கணிசமாக உள்ள தொகுதியாகவும் உள்ளது.
அனைத்து சமுதாய மக்களும் கலவையாக இங்கு உள்ளனர். 2021 சட்டமன்ற தேர்தலில் மநீம தலைவர் கமல்ஹாசன் இதே தொகுதியில் போட்டியிட்டு மிகவும் குறுகிய வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். மாநகராட்சியின் 19 வார்டுகள் அடங்கிய சிறு தொகுதியாக உள்ளது. அதனால் திமுக சார்பில் ராஜீவ் காந்தி, டாக்டர் மகேந்திரன், மீனா ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் முயற்சி செய்தனர்.
திமுகவின் கேம் பிளான்
இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி 2 முறை போட்டியிருப்பதால் அவர்களும் இந்தமுறை தெற்கு தொகுதியை கேட்டனர். ஆனால் திமுக பலமான திட்டத்துடன் இறங்கியுள்ளது. அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் அர்ஜுனன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அம்மன் அர்ஜுனன் 2 முறை கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
மேலும் அங்கு கவுன்சிலராகவும் இருந்துள்ளார். ஆனால் செந்தில் பாலாஜி தீவிரமான களப்பணி மூலம் அங்கு வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார். கோவையில் அதிமுகவுக்கு எஸ்.பி. வேலுமணி, பாஜகவுக்கு அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் என்று பல முகங்கள் உள்ளன. ஆனால் திமுகவுக்கு அப்படி சொல்லிக் கொள்ளும்படியான முகங்கள் இல்லை. அந்த குறையை போக்கும் விதமாக செந்தில் பாலாஜியை நேரடியாக கோவையில் களமிறக்கியுள்ளனர்.
எப்படி எதிர்கொள்வார்
அவரின் வருகை மூலம் கோவை தெற்கு தொகுதி மட்டுமல்லாமல் அருகில் உள்ள தொகுதிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டு வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுக தலைமை கணக்கு போடுகிறது. திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜி கரூரில் இருந்து கோவை வரும் அதேநேரத்தில், கோவை மற்றும் கரூர் ஆகிய 2 மாவட்டங்களையும் எப்படி கையாள போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications