“விஜய் தரப்பிடம் ஒரு கேள்வி கூட கேட்கலையே.. தவெக பற்றி பேசுவதை தவிர்க்கலாம்” செந்தில் பாலாஜி காட்டம்
கோவை: "ஏன் 7 மணி நேரம் தாமதமாக வந்தீர்கள்? ஏன் 500 மீட்டருக்கு முன்பாகவே வண்டிக்குள் சென்று விட்டீர்கள்? ஏன் 12 மணிக்கு என்று அறிவித்துவிட்டு இரவு 7 மணிக்கு வந்தீர்கள்? என்று கேட்க வேண்டியவர்களை கேட்டிருக்க வேண்டாமா?" என செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செந்தமிழ் செல்வன் என்று பொறுப்பேற்றார். அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

செந்தில் பாலாஜி பேட்டி
இந்த நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செந்தில் பாலாஜி, "செந்தமிழ்ச்செல்வன் முறைப்படி அவரது பொறுப்பை ஏற்கிறார். 2026 ஆம் ஆண்டு எங்கள் வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய வேண்டும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனக் கூறினார்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகப் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரம் குறித்த கேள்விக்கு, "அது பற்றி ஏற்கனவே விரிவாக பேசிவிட்டேன். விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே விசாரணை முடிந்த பிறகு அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்கும். எனவே அது சம்பந்தமான கேள்விகளை தற்போதைக்கு தவிர்க்கலாம்" எனத் தெரிவித்தார்.
கரூர் விவகாரம்
கரூர் விவகாரம் தொடர்பாக பல்வேறு புதிய வீடியோக்கள் வருவது தொடர்பான கேள்விக்கு, "எந்தெந்த வீடியோக்கள் வெளியாகிறதோ அவை அனைத்தும் விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்படும் என்று பதிலளித்தார்.
தமிழக அரசு இதனை வைத்து அரசியல் செய்வதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, "ஏற்கனவே அரசின் சார்பில் முழு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து கரூரிலிருந்து நான் முழு விளக்கங்களை தெரிவித்துள்ளேன். விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையில் என்ன வருகிறதோ என்பதைப் பார்த்து அது பற்றி பேசுவோம். அதுதான் சரியாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
கேட்க வேண்டியவர்களிடம்
மேலும் பேசிய செந்தில் பாலாஜி, "அரசின் மீது கேட்கக்கூடிய கேள்விகளை இன்னொரு பக்கம் செய்தியாளர்கள் கேட்பதில்லை. யாரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை யாரிடம் கேட்கிறோம் என்று செய்தியாளர்கள் நீங்களே சுய பரிசோதனை செய்யுங்கள். ஏன் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தீர்கள்? ஏன் 500 மீட்டருக்கு முன்பாகவே வண்டிக்குள் சென்று விட்டீர்கள்? ஏன் 12 மணிக்கு என்று அறிவித்துவிட்டு இரவு 7 மணிக்கு வந்தீர்கள்? டிசம்பர் மாதம் திட்டமிட்டு இருந்த பிரச்சாரம் ஏன் முன்கூட்டியே வந்தது? என்று கேட்டிருக்க வேண்டும்.
இருக்கின்ற சூழலை எடுத்துக் கூறுகின்ற கடமை நமக்கு உள்ளது அந்த பொறுப்பும் நம்மிடம் உள்ளது. என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் எதிர் புறத்திலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா? உங்கள் கேள்விகள் எல்லாம் ஒரு தரப்பை நோக்கி மட்டுமே உள்ளது. கரூர் விவகாரம் தொடர்பாக தற்போது எந்த கேள்விகளும் வேண்டாம் விசாரணை முடிந்து அறிக்கை வந்த பிறகு மீண்டும் பேசுவோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications