கோவை மாநகராட்சி குப்பை லாரிகளை சுடுகாட்டில் நிறுத்த வேண்டுமா? அதிகாரிகளுக்கு டிரைவர்கள் எதிர்ப்பு
கோவை: கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பையை ஏற்றி செல்வதற்காக 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான ஓட்டுனர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் பணியாமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வாகன ஓட்டிகளை, கோவையில் உள்ள சுடுகாடுகளில் வாகனங்களை நிறுத்த சொல்லி மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அந்த அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகராட்சி குப்பை ஏற்றும் வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர் .
கோவை மாநகராட்சியானது தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாநகராட்சியாக இருக்கிறது.மக்கள் அடர்த்தியிலும், மக்கள் தொகை எண்ணிக்கையிலுமே சென்னைக்கு அடுத்தபடியாக கோவை பெரிய நகரமாக இருக்கிறது. மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. 100 வார்டுகளும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 20 வார்டுகள் உள்ளன. கோவை மாநகராட்சியில் சுமார் 7000 க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இங்கு தினமும் பல டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அப்படி கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பையை ஏற்றி செல்வதற்காக 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கான ஓட்டுனர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் பணியாமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில் கோவையின் கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தில் பணிமனைகளில் வாகனங்களை நிறுத்தி இயக்கி வந்த ஓட்டுநர்களை அந்தந்த மண்டலத்துக்குட்பட்ட சுடுகாடுகளில் நிறுத்தி இனி இயக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து ஆட்சேபணை தெரிவித்த நான்கு ஓட்டுநர்கள் மீது எந்த முன்னறிவிப்பும் விளக்கமும் இன்றி பணி நீக்க நடவடிக்கையில் , ஒப்பந்த நிறுவனத்தினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து கொண்டு ஈடுபடுகிறார்களாம். மேலும் சட்டபூர்வ தொழிலாளர்கள் பலன்களான இ எஸ் ஐ , பி எப் பிடித்தம் செய்வதை முறையாக தொழிலாளர்கள் கணக்கில் செலுத்தாமல், காலம் தாழ்த்தி வருவதாக ஒப்பந்த நிறுவனத்தின் மீது தொழிலாளர்கள் புகார் கூறுகிறார்கள். மேலும் காழ்ப்புணர்ச்சியுடன் , ஓட்டுனர்கள் மீது தீண்டாமை எண்ணத்துடன் சுடுகாட்டில் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக பெரிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
கோவையில் உள்ள சுடுகாடுகளில் வாகனங்களை நிறுத்த சொல்லும் அதிகாரிகள் மீது எஸ் சி எஸ் டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் ஓட்டுனர்கள் புகார் அளித்தனர். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் சுடுகாட்டில் வாகனங்களை நிறுத்த சொல்லும் நடவடிக்கையை கைவிட வேண்டும் , இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்த ஊழியர்கள் மீது எடுத்த நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் இல்லாவிட்டால் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications