பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு...கோவையில் பதட்டம்!!
கோவை: கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பெரியார் தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
கோவை சுந்தராபுரம் பகுதியில் இருக்கும் பெரியார் சிலை மீது இன்று மர்ம நபர்கள் யாரோ காவிச் சாயத்தை ஊற்றியுள்ளனர். இந்த தகவல் அறிந்த தி.க, திமுக மற்றும் பெரியார் தொண்டர்கள் அங்கே குவிந்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கபபட்டுள்ளனர். போலீசார் இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்பும் தமிழகத்தில் பல இடங்களில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.
ஏழைகளை படுகுழியிலிருந்து மீட்ட திட்டத்தை நிறுத்திவிட்டீர்களே.. கிராப் போட்டு ராகுல் காந்தி கேள்விசமீப சில மாதங்களாக தமிழகத்தில் பெரியார் மற்றும் திருவள்ளுவர் சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டு இருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ''பெரியார் சிலைகள் தொடர்ந்து அவமரியாதை செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு சிலரின் வக்கிரப் புத்தியைக் காட்டுகிறது. இந்த அரசும் மெத்தனமாக இருக்கிறது. பெரியார் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மதிமுக தலைவர் வைகோ வேண்டுகோள் வைத்து இருந்தார்.
தமிழகத்தில் சனாதன சக்திகளான ஆர்எஸ்எஸ், பாஜ உள்ளிட்ட சங்பரிவார்கள் பெரியாரை கொச்சைப்படுத்தி வருகின்றனர். அவரது கருத்தியலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சனாதன சக்திகள் அண்மைக்காலமாக இத்தகைய வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர்ஜவாஹிருல்லாவும் கண்டனம் தெரிவித்து இருந்தார். ''சமூகநீதிக்கு எதிரான சிந்தனை உடையவர்களால் மட்டுமே இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபட முடியும். கயவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்து இருந்தார்.
தமிழகத்தில் தொடர்ந்து பெரியார் சிலை மீது கறுப்பு மை வீசுவது, செருப்பு மாலை அணிவிப்பது, சிலையை உடைப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பேசி இருந்த ரஜினிகாந்த் சேலத்தில் நடந்த ஊர்வலத்தின்போது சாமி சிலைக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து இருந்தார் என்று கூறி இருந்தார். இதுகுறித்த செய்தி துக்ளக்கில் மட்டும் வெளியாகி இருந்தது. இதனால் அந்த இதழை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தடை செய்தார் என்று பேசி இருந்தார். இது அப்போது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அவ்வாறு செருப்பு மாலை பெரியார் அணிவித்தாரா? இல்லையா? என்ற விவாதமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.