ஆலோசனை சொன்ன ஆதரவாளர்கள்.. தவெக பக்கம் நகரத் தயங்கும் எஸ்பி வேலுமணி.. பின்னணியில் அண்ணாமலை!
கோவை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தவெகவில் இணைய தயக்கம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. அண்ணாமலை தொடங்கவுள்ள புதிய கட்சியின் செயல்பாடுகளை பார்த்துவிட்டு, இறுதி முடிவை எடுக்கலாம் என்று எஸ்பி வேலுமணி ஆலோசனை செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுகவில் இருந்து தவெக பக்கம் செல்லும் அதிமுக நிர்வாகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 4 எம்எல்ஏ-க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். அதேபோல் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் பனையூர் பக்கம் ஒதுங்கிவிட்டனர்.

அடுத்ததாக சி விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைய தயாராகிவிட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் என்று பலரும் தவெகவில் இணைகிறார்கள். இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதிலும் எஸ்பி வேலுமணி தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்திலும் உங்கள் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று எஸ்பி வேலுமணியிடம் அவரின் ஆதரவாளர்கள் கூறி இருக்கின்றனர். குறிப்பாக திமுகவை எந்தக் கட்சி அதிகம் எதிர்க்கிறதோ, அந்தப் பக்கம் செல்வோம் என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் தவெக பக்கம் சென்றால், சரியாக இருக்குமா என்று எஸ்பி வேலுமணி தயக்கம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. எஸ்பி வேலுமணி கடந்த சில ஆண்டுகளாகவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனிடையே அண்ணாமலை புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்.
இதனால் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கிய பின், அவரின் செயல்பாடுகளை பார்த்துவிட்டு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று எஸ்பி வேலுமணி கருதுவதாக சொல்லப்படுகிறது. எஸ்பி வேலுமணி போன்ற கொங்கு மண்டலத்தின் வலிமையான தலைவர் தவெக பக்கம் சென்றால், அது விஜய்யின் கரங்களுக்கு மிகப்பெரிய வலிமையை கொடுக்கும். இதனால் தவெக தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications