கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்தது தமிழக போலீஸ்
கோவை: கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.விடம் தமிழக போலீஸ் ஒப்படைத்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே அண்மையில் கார் ஒன்று திடீரென வெடித்தது. இந்த கார் வெடிப்புக்கு காரில் இருந்த சிலிண்டர்தான் காரணம் என தெரியவந்தது. அதேநேரத்தில் காரில் ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் சிதறி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர் முபின் என அடையாளம் காணப்பட்டது. முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதனால் பயங்கரவாத தாக்குதலுக்கான சதியில் முபின் ஈடுபட்டது அம்பலமானது.

என்.ஐ.ஏ.வுக்கு பரிந்துரை
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் முபினின் கூட்டாளிகள் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சட்டவிரோத பாதுகாப்பு சட்டம்- உபா அல்லது ஊபா பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து இவ்வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வசம் ஒப்படைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார்.

கோவையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள்
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையையடுத்து மத்திய உள்துறை அமைச்சகமும் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

என்.ஐ.ஏ. விவகாரத்தில் சர்ச்சை
இதனிடையே என்.ஐ.ஏ.வுக்கு கோவை சம்பவத்தை தமிழக அரசு தாமதமாக மாற்றிவிட்டது; இதனால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். மேலும் தமிழக போலீசார் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனை தமிழக போலீசார் மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

ஆவணங்கள் ஒப்படைப்பு
இந்நிலையில் தமிழக போலீசார் தங்கள் வசம் இருந்த கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துவிட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் ஏற்கனவே என்.ஐ.ஏ. காவல்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இனி கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்கும்.












Click it and Unblock the Notifications