"மருத்துவ காலி இடங்கள்! மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்!" எதற்காக சொல்கிறார் மா.சுப்பிரமணியன்
கோவை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், வேக்சின் பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 4ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் நல வாழ்வு மைய தின விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு இ - சஞ்சீவினி தொலைத்தொடர்பு மூலமாகச் சிறப்பு மருத்துவ ஆலோசனை திட்டத்தின் தொடக்க விழா இன்று மாலை கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேரம்பாளையம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

புதிய திட்டம்
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினார். பின்னர், இத்திட்டத்தின் நோக்கமான செவிலியர்கள் உதவியுடன் காணொலி காட்சி வாயிலாக மருத்துவ அலுவலர்கள் மற்றும் நிபுணர்களைத் தொடர்பு கொண்டு நோயாளிகள் தங்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளைப் பெற்றுப் பரிந்துரை வழங்கப்படும்.

மா. சுப்பிரமணியன்
இத்திட்டத்தில் இன்று செவிலியர்கள் உதவியுடன் சில நோயாளிகள் தங்களது பிரச்சினைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக மருத்துவ அலுவலர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "இந்தியா முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகள்
அதேபோல தமிழகத்திலும் முழு ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதே தவிர மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம். உலகம் முழுவதும் தொற்றில் பரவல் அதிகரித்துள்ள சூழலில் இந்தியாவைப் பொருத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பரவலானது 4 சதவிகிதமாக உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 0.5 சதவிகிதம் இருந்து வந்த நிலையில் தற்போது 4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் தொற்றின் பரவல் அதிகரித்து வரும் சூழலில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

வேக்சின் பணிகள்
தமிழகத்தைப் பொறுத்தவரைத் தடுப்பூசி செலுத்துவதில் தன்னிறைவைப் பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் முதல் டோஸ் வேக்சின் 92 சதவிகிதமும், 2ஆவது டோஸ் வேக்சின் 77 சதவிகிதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக 88 சதவிகிதம் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. எனவே, புதிதாக எந்த அலை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கும் வகையில் மருத்துவ உட்கட்டமைப்பு நம்மிடம் உள்ளது.

மருத்துவ காலியிடங்கள்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 100% மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. மத்திய அரசுதான் 812 இடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் 24 இடங்களை மத்திய அரசு நிரப்பவில்லை. அவற்றை நிரப்ப தமிழக அரசு வலியுறுத்தி உள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications