கண்களை மூடிக்கொண்ட வீரர்கள்.. டிஎன்பிஎல் போட்டிக்கு இடையே போடப்பட்ட வேப்பிலை புகை.. பரபர சம்பவம்
கோயம்புத்தூர்: நேற்று நடந்த டிஎன்பிஎல் ஆட்டத்தில் போட்டிக்கு நடுவே வேப்பிலை புகை போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தற்போது பிரபலமாக இருக்கும் மாநில லீக் ஆட்டம் என்றால் அது டிஎன்பிஎல் ஆட்டம்தான். டிஎன்பில் போட்டிகள் காரணமாக நிறைய தமிழ்நாடு வீரர்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் பலர் ஆட காரணமாக டிஎன்பிஎல் போட்டிகள் அமைந்துள்ளன. இந்த வருட சீசனில் முதல் போட்டியே சூப்பர் ஓவர் வரை சென்று அதிரடியாக அமைந்தது.

ஐபிஎல்
இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று 16வது ஆட்டம் நடைபெற்றது. கோவை எஸ்என்ஆர் மைதானத்தில் ஆட்டம் நடைபெற்றது. சேலம் ஸ்பார்ட்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையில் இந்த போட்டி நடைபெற்றது.நேற்று முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 165/7 ரன்கள் எடுத்தது.

டிஎன்பிஎல்
மதுரை அணியில் அதிகபட்சமாக ரித்திக் ஈஸ்வரன் 41 ரன்கள் எடுத்தார். சேலம் வீரர் கிஷோர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து இறங்கிய சேலம் அணி தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பிரணவ் குமார் மட்டும் 25 ரன்கள் எடுத்தார். மற்றபடி வேறு வீரர்கள் பெரிதாக ரன்களை எடுக்கவில்லை.

சேலம்
இதனால் சேலம் அணி வெறும் 126/9 ரன்கள் எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சேலம் அணி பேட்டிங் செய்த போது திடீரென மைதானத்திற்குள் பூச்சிகள் அதிகமாக வந்தன. லைட் வெளிச்சம் காரணமாக மிக அதிக எண்ணிக்கையில் பூச்சிகள் வந்தன. இதனால் வீரர்கள் பீல்டிங் செய்ய முடியவில்லை,

மதுரை
பலரின் கண்களில் பூச்சிகள் அடிக்க தொடங்கியதால் வீரர்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ரசிகர்களும் போட்டியை பார்க்க கஷ்டப்பட்டனர். இதையடுத்து 6 பாக்கெட்டுகளில் மணல் போடப்பட்டு அதில் வேப்பிலை மற்றும் பூச்சி மருந்து போட்டு புகை போட்டனர். இதை 8 நிர்வாகிகள் மைதானம் முழுக்க கொண்டு சென்று, பூச்சிகளை கொல்லும் விதமாக புகை போட்டனர்.

புகை
மைதானத்தில் இவர்கள் புகை பாக்கெட்டுகளுடன் ஓடிய காட்சிகள் வைரலானது. இதனால் ஆட்டம் 15 நிமிடம் தடைபட்டது. புகை காரணமாக போட்டி நடக்கவில்லை. அதன்பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இருந்தாலும் ஆங்காங்கே பூச்சிகள் இருந்ததால் வீரர்கள் கடைசி வரை ஆட சிரமப்பட்டனர். டிஎன்பிஎல் போட்டியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications