"இப்படியுமா அடிப்பீங்க".. வலியில் துடிக்கும் கோவை 7 வயது சிறுமி.. ஆசிரியை பெரியநாயகி சஸ்பெண்ட்
கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளையத்தில் 7 வயது சிறுமியை தாக்கி காயப்படுத்திய ஆசிரியை பெரிய நாயகியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள எலச்சிபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 7 ம் தேதி 2-ம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமி ஷாஷினியை ஆசிரியை பெரியநாயகி என்பவர் குச்சியால் அடித்ததில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுமி திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொள்வதாக ஆசிரியை பெரிய நாயகி தெரிவித்த நிலையில் சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து புகார் அளிக்கவில்லை. இந்நிலையில், சிறுமிக்கு கையில் ஏற்பட்ட காயம் ஆறாமல் இருந்ததுடன் வலியும் ஏற்பட்டதால், கடத்த நவம்பர் 21 ஆம் தேதி கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக மாணவி அனுமதிக்கப்பட்டார்.
மாணவி காயத்துடன் அனுமதிக்கப்பட்டது குறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆசிரியர் அடித்ததால் மாணவிக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் அனுமதி பெற்று, பள்ளி ஆசிரியை பெரியநாயகி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பள்ளி ஆசிரியை பெரியநாயகி மீது குழந்தை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மாணவியை ஆசிரியை பெரியநாயகி அடித்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், எலச்சிபாளையம் நடுநிலைப் பள்ளி ஆசிரியை பெரிய நாயகியை இன்று சஸ்பெண்ட் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பள்ளி ஆசிரியை அடித்த சம்பவம் வெளியில் தெரிந்து, துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications