அடுத்த மாதம் திருமணம்.. கோவை பேரூரில் பஸ்சுக்கு கீழே படுத்து தூங்கிய டிரைவர்.. தலை நசுங்கி மரணம்
கோவை: கோவை பேரூர் அருகே கவனிக்காமல் இயக்கியதால் பஸ்சுக்கு கீழே படுத்து தூங்கிய டிரைவர் தலை நசுங்கி உயிரிழந்தார். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இந்த விபரீதம் நடந்துள்ளது.
கோவையை அடுத்த காளப்பட்டி காட்டூர் வீதியைச் சேர்ந்த 25 வயதாகும் கருப்பசாமி தனியார் பஸ்ஸில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் கோவை பேரூரில் இருந்து பீளமேடு பாலிடெக்னிக் வரை செல்லும் தனியார் பஸ்சை ஓட்டிச் சென்று வந்தார்

நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் தான் ஓட்டிவந்த தனியார் பஸ்ஸை கருப்பசாமி பேரூர்- சிறுவாணி ரோடு பச்சாபாளையம் அருகே தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினார். அங்கு தான் பேருந்துகள் தினமும் நிறுத்தப்படுவதுடன், இரவில் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஓய்வெடுத்து மறுநாள் அங்கிருந்து பணிக்கு செல்வார்கள். குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் 2 தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
இரவு பேருந்துகளை நிறுத்தியதும் தனியார் பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அங்கேயே படுத்து உறங்கி உள்ளனர். இதில் டிரைவர் கருப்பசாமி தான் ஓட்டி வந்த தனியார் பேருந்தின் கீழே பாய் விரித்து படுத்து தூங்கினார். நேற்று காலையில் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் எழுந்துள்ளார்கள். அப்போது கருப்பசாமியையும் அவர்கள் எழுப்பி விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் அசந்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மற்ற தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் குளித்து தயாராகி பணிக்கு புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை 6.10 மணிக்கு பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு தனியார் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து கருப்பசாமி ஓட்டும் தனியார் பஸ்சை நேற்று ஓட்ட வேண்டிய மற்றொரு டிரைவர் சூர்யா அங்கு வந்தார். அப்போது கண்டக்டர் மகேஷ்குமார் தன்னிடம் இருந்த டிக்கெட்டுகளை சரி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். இதற்கிடையே டிரைவர் சூர்யா, பஸ்சுக்கு கீழே கருப்பசாமி படுத்து இருப்பதை கவனிக்காமல் பஸ்சை முன்னோக்கி இயக்கினாராம். அப்போது பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய கருப்பசாமி கண் இமைக்கும் நேரத்தில் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோவை பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்கள், டிரைவர் சூர்யாவை பிடித்து கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் பஸ் டிரைவர் கருப்பசாமிக்கு அடுத்த மாதம் (ஜூன்) திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அவர் தான் ஓட்டிய பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications