அம்மா அம்மா நீ எங்க அம்மா.. பஸ்ஸில் குதிரை ஸ்டிக்கரை பார்த்து ஏக்கத்துடன் துரத்தும் குட்டி.. வீடியோ
கோவை: கோவை அருகே தாயை பிரிந்த ஒரு குட்டி குதிரை அவ்வழியாக சென்ற பேருந்தில் இருந்த குதிரை ஸ்டிக்கரை பார்த்து அதன் பின்னாலேயே ஓடியது பார்ப்போரை கலங்கடித்தது.
தாய் பாசத்திற்கு இணை இந்த உலகில் வேறு ஏதும் இல்லை. காக்கை குருவி முதல் விலங்குகள், மனிதர்கள் வரை தாய் பாசம் பின்னி பிணைந்திருக்கிறது. மழை, வெயில் என வந்தால் தனது குட்டிகளை வாயில் கவ்வியபடியே பாதுகாப்பான இடத்திற்கு தாய் விலங்கு அழைத்து செல்லும்.
தன் உயிரை கொடுத்தாவது தான் ஈன்றதை காப்பாற்றும் குணம் தாய்க்கு உண்டு. காசு, பணம், நகை, நட்டு என எத்தனை இருந்தாலும் தாய், தந்தைக்கு அவை ஈடாகாது. கருவில் சுமக்கும் தாய், அந்த கருவை இந்த உலகிற்கு கொண்டு வந்த பிறகு சுமந்து வருகிறாள்.

தாய் பாசம்
தாய் பாசத்திற்காக ஏங்கும் குழந்தைகள், விலங்குகள் என உள்ளனர். 10 மாதம் சுமந்து பெற்ற தாயையே வீட்டை விட்டு அடித்து துரத்தி கொடூரம் செய்யும் மகன், மகள்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கோவையில் தாயை பிரிந்த குட்டி குதிரை ஒன்று விலங்குகளுக்கான தாய்ப்பாசம் என்றால் என்ன என்பதை காட்டியுள்ளது.

பேரூர் கோயில்
கோவை பேரூர் பட்டீஸ்வரம் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கூட்டத்தில் இருந்த தாய் குதிரை ஒன்று வேறு பகுதிக்குச் சென்றுவிட்டது. இதனால் ஏங்கிய குட்டிக் குதிரை ஒன்று தன் தாய்க் குதிரையை தேடி வந்தது.

பேரூர் பேருந்து நிறுத்தம்
இந்நிலையில் இன்று பேரூர் பேருந்து நிறுத்தம் அருகே காந்திபுரம் செல்லக் கூடிய தனியார் பேருந்தில் குதிரை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதை பார்த்த அந்த குட்டி குதிரை, தன் தாய் என கருதி பேருந்தில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை ஏக்கத்துடனும் தனது "தாய்" நம்மை பார்த்து விடமாட்டாளா என்ற ஆசையுடன் பேருந்தையே துரத்தி சென்றது.

குட்டி குதிரை
அந்த பேருந்தை பார்த்தபடியே குட்டி குதிரை கனைத்தது. பேருந்தில் ஒட்டியிருக்கும் தாய் என்னதான் கனைத்தாலும் வரமாட்டாள் என்பது அந்த குட்டிக்கு தெரியவில்லை. இதனால் துரத்தி கொண்டே ஓடியது. இது பார்ப்போர் மனதை கலக்கமடைய செய்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications