ரிதன்யா வழக்கில் தொய்வு: வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் பிரிவை சேர்க்க தந்தை கோரிக்கை
கோவை: வரதட்சணைக் கொடுமையால் திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணை மிகவும் தொய்வாக செல்வதாகவும், பெண்கள் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்த்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டணை வாங்கி கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து கோவை ஐஜி அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ரிதன்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைக்காட்டிப்புதூரைச் சேர்ந்த அண்ணாதுரை மகள் ரிதன்யாவுக்கும், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன் என்பவரது மூத்த மகன்வழிப் பேரன் கவின் குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியன்று அன்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, அவரது பெற்றோர் 300 சவரன் நகையையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.

ஆனாலும், கணவர் கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் கூடுதலாக 200 சவரன் நகையையும், பணத்தையும் கேட்டு ரிதன்யாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். கணவரும் மன ரீதியாகவும், தொடர்ந்து உடல் ரீதியாகவும் ரிதன்யாவை டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால், ரிதன்யா தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாகிய ரிதன்யா அவரது தந்தைக்கு ஆடியோ மூலம் தனக்கு அளிக்கப்பட்ட கொடுமைகள் குறித்து கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் ரிதன்யா கணவர் கவின்குமார், ரிதன்யாவின் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரிதன்யாவின் வழக்கு விசாரணை மிகவும் தொய்வாக செல்வதாகவும், இந்த வழக்கை சாதாரண தற்கொலை வழக்கு, கொடுமை வழக்காக போட்டுள்ள நிலையில், பெண்கள் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்த்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டணை வாங்கி கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து கோவை ஐடி அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ரிதன்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கோவையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கு தொய்வாக போகின்றது என்பதால் ஐஜியை சந்திக்கு மனு கொடுக்க வந்திருக்கின்றேன். சாதாரண தற்கொலை வழக்கு, கொடுமை வழக்காக போட்டு இருக்கின்றனர். சரியான பிரிவுகளை சேர்த்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டணை வாங்கி கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கின்றோம் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக ஐ.ஜி தெரிவித்து இருக்கின்றார்.
இன்னும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், லேப் ரிப்போர்ட்டுகள், ஆடியோ ரிப்போர்ட்டுகள் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த ரிசல்டுகள் வருவதற்கு தாமதமாகும் என்பதால் அவை வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். வழக்கு தொய்வாவதால் விசாரணை அதிகாரி மேல் சந்தேகம் வருகிறது. அதனால் தனி விசாரணை அதிகாரி வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். 3 பேரையும் கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அதற்கடுத்த நாள் ஒருவரை ஜாமீனில் விடுவித்தனர். பின்னர், மாமியார் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியது. இதைத்தொடர்ந்து, ஒருவாரம் கழித்து எஸ்பி அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில், மாலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
லேப் ரிப்போர்ட், ஆடியோ ரிப்போர்ட் வந்தவுடன் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக காவல் துறை தெரிவித்து இருக்கின்றனர். ஆடியோ ஆதாரங்கள் இருந்தும் உரிய சட்ட பிரிவுகளை சேர்க்கவில்லை. பெண்கள் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரிவுகளை சேர்க்கவில்லை. கூடுதல் வழக்குப் பிரிவுகளை சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனுவை கொடுத்து இருக்கின்றோம் என்றார்.
மேலும், எனது மகளை இழந்து வருத்தத்தில் இருந்தேன். நான் பேச்சாளர் இல்லை. என் வலியில் பேசினேன். சமூக வலைதளத்தில் தவறான கருத்துகளைப் பகிர்வது வருத்தம் அளிக்கின்றது. நீதிக்கான தகவல்களை பரிமாறி எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications