வால்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியா? நாளை மறுநாள் அறிவிக்க போகும் த.மா.கா. கோவை தங்கம்
கோவை: வால்பாறை சட்டசபை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோவை தங்கம் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.
வால்பாறை சட்டசபை தொகுதியை எப்படியாவது பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக முயன்றனர். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய கோவை தங்கம் இத்தொகுதியில் போட்டியிட விரும்பினார்.

வால்பாறையில் அதிமுக
ஆனால் அதிமுக அமைச்சர்களோ கோவை தங்கம் அதிருப்தி அடைவார் என தெரிந்தும் அக்கட்சிக்கு கொடுக்கவில்லை. வால்பாறை தொகுதியில் அமுல்கந்தசாமி போட்டியிடுவார் என அதிமுக அறிவித்தது. அந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான கஸ்தூரி வாசுக்கு சீட் தரப்படவில்லை.

சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு வாய்ப்பு இல்லை
இதனால் வால்பாறை தொகுதியில் கஸ்தூரி வாசு ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே அதிமுக வேட்பாளருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சி என்றபோதும் த.மா.கா.வின் கோவை தங்கம், வால்பாறையில் சுயேட்சையாக போட்டியிடலாம் என திட்டமிட்டுள்ளாராம்.

கோவை தங்கம் என்ன ப்ளான்?
இது தொடர்பாக நாளை மறுநாள் முக்கியமான முடிவை அறிவிக்க இருப்பதாகவும் கோவை தங்கம் கூறியுள்ளார். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனுக்கு நெருக்கடி தராமல் இருக்க, அக்கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக கோவை தங்கம் போட்டியிடலாம். அதைத்தான் நாளை மறுநாள் அறிவிக்க கூடும் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

போட்டியிட்டால் பரபரப்புதான்
திமுக கூட்டணியில் வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆறுமுகம் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை தங்கம் 2001, 2006 தேர்தல்களில் இருமுறை வெற்றி பெற்றவர். 2011 சட்டசபை தேர்தலில் தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான ஆறுமுகத்திடம் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோவை தங்கம் தோல்வி அடைந்தார். இதனால் கோவை தங்கமும் சுயேட்சையாக போட்டியிட்டால் வால்பாறை தொகுதி அனல் பறக்கும்.












Click it and Unblock the Notifications