இப்போ ஷார்ட் ஃபிலிம்.. நெக்ஸ்ட் லார்ஜ் ஃபிலிம்.. அடுத்து "10 எம்".. டிடிஎஃப் வாசன் போட்ட லிஸ்ட்!
கோவை: கோவை யூடியூபர் டிடிஎஃப் வாசன் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தனது சேனலில் அவரே தெரிவித்துள்ளார்.
Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த 22 வயதான வாசன் நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது பைக்கில் பயணம் செய்வதையும் அதில் செய்யும் சாகசங்களையும் வீடியோவாக போடுவார்.
பைக்கில் ஸ்டன்ட் செய்தல், வேகமாக செல்வது, பைக்கை தூக்கி ஓட்டுவது, ரேஸ் உள்ளிட்டவைகளை இவர் வீடியோ எடுத்து போட்டு வருகிறார். அதே வேளையில் தான் செய்யும் ஸ்டன்டுகளை யாரும் பயிற்சி இல்லாமல் செய்ய கூடாது என்ற அறிவுரைகளையும் வழங்கி வருவார்.
யூடியூப் பிரபலத்துக்கு “பிராப்ளம்”.. ஜிபி முத்துவுடன் அதிவேக ரெய்டு! TTF வாசன் மீது போலீஸ் வழக்கு
243 கி.மீ.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் 243 கிமீ. வேகத்தில் வாகனத்தை இயக்கிய போதே பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்துவை தனது சூப்பர் பைக்கில் அமர வைத்து சாகச பயணம் மேற்கொண்டார்.
எதிர்திசை
அப்போது எதிர்திசையில் வாகனங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்த நிலையில் 150 கி.மீ. வேகத்தில் சென்றார். மேலும் அவரது சாகசத்தை கண்டு ஜிபி முத்து அரண்டு போனார். நடுநடுவே இரு கைகளையும் விட்டுவிட்டு வாகனத்தை இயக்கினார் வாசன். அவரது யூடியூப்பில் போட்ட இந்த வீடியோ வைரலானது. பிஸியான சாலையில் இத்தனை வேகமாக செல்வதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஜிபி முத்து
பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து ஹெல்மெட் ஏதும் அணியாமல் இருந்தார். தங்களது சேனலுக்கான வியூஸ்களை அதிகரிப்பதற்காக இவ்வாறு மனித உயிர்களுக்கு உலையை வைக்கும் நபர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
வழக்கு பதிவு
இந்த நிலையில் கோவை பாலக்காடு சாலையில் இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கிய யூடியூபர் வாசன் மீது கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும், லைசன்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் நேற்றைய தினம் தன்னை ஜெயிலில் போட்டு லைஃப்பை ஸ்பாயில் செய்து விடாதீர்கள் என உருக்கமாக கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கை
மேலும் தான் தற்போது குறும்படங்களில் நடித்து வருவதாகவும் இதற்கடுத்து ஒரு சில ஸ்டன்ட்களை செய்யவுள்ளதாகவும் சினிமாவில் நடிக்க போவதாகவும், அதன்பிறகு டிராக்குகளில் ரேஸ்களில் ஈடுபடுவதாகவும் தனது வருங்கால பிளானை தெரிவித்துள்ளார் வாசன். படத்தில் என்ன ரோல், என்ன படம் என்பதை நான் அப்புறமாக சொல்கிறேன். மேலும் தற்போது 3 மில்லியனாக உள்ள சப்ஸ்கிரைபர்களை 10 மில்லியனாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய பிளான்களுடன் உள்ள தன்னை யாரும் தவறாக சித்தரித்து செய்தி வெளியிட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.